வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Vendhaya Kanji With Karuvepilai Thuvaiyal Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சிம்பிளாக ஒரு கஞ்சி செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கொளுத்து கோடை வெயிலுக்கு இதமாக வெந்தய கஞ்சியையும், அதற்கு சைடு டிஷ்ஷாக கறிவேப்பிலை துவையலையும் செய்து சாப்பிடுங்கள். இந்த கஞ்சி செய்வது மிகவும் சுலபம் மற்றும் ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கஞ்சியானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வெந்தய கஞ்சியையும், கறிவேப்பிலை துவையலையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய கஞ்சி மற்றும் கறிவேப்பிலை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Vendhaya Kanji With Karuvepilai Thuvaiyal How To Make Fenugreek Kanji With Curry Leaves Thuvaiyal

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 கப்
* தண்ணீர் - 7 கப் + தேவையான அளவு
* வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1 மூடி (துருவியது)

கறிவேப்பிலை துவையலுக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* வரமிளகாய் - 6
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் குக்கரில் பச்சரிசியை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 7 கப் நீரை ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 15 பல் நறுக்கிய பூண்டு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு மசித்து விட்டு, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அதோடு துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், வெந்தய கஞ்சி தயார்.
* பின்பு துவையல் செய்ய, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தேங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், புளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான கறிவேப்பிலை துவையல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, March 20, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion