1 கப் சம்பா ரவையும், 1 தக்காளியும் இருந்தா.. 10 நிமிஷத்துல இப்படி தோசை சுடுங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

Thakkali Samba Rava Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் தோசை மாவு தீர்ந்துவிட்டதா? காலையில் சட்டென்று டிபனை செய்ய வேண்டுமா? வீட்டில் 1 கப் சம்பா ரவையும், 1 தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தக்காளி சம்பா ரவா தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கெட்டி தேங்காய் சட்னியை செய்து சாப்பிடுங்கள்.

இந்த டிபன் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். மேலும் இது சத்தானதும் கூட. வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள் இப்படியான டிபன் ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்திற்கு உதவியாக இருக்கும்.

Thakkali Samba Rava Dosa How To Make a Thakkali Samba Rava Dosa

உங்களுக்கு தக்காளி சம்பா ரவா தோசையையும், கெட்டி தேங்காய் சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சம்பா ரவா தோசை மற்றும் கெட்டி தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தோசைக்கு...

* சம்பா ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* தக்காளி - 1
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* அரிசி மாவு - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

சட்னிக்கு...

* தேங்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - பாதி
* பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் சம்பா ரவையை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் சிறிது நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் 10 நிமிடம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்துள்ள சம்பா ரவை, தக்காளி, வரமிளகாய், சீரகம், இஞ்சி, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொத்தமல்லியை சிறிது தூவி நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னிக்கு, மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பாதி பெரிய வெங்காயம், பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதிக நீரை ஊற்றி விட வேண்டாம். இந்த சட்னி சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் சட்னி தயார்.
* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மிதமான தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான தக்காளி சம்பா ரவை தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, January 29, 2026, 9:10 [IST]
Desktop Bottom Promotion