தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..

Posted By:

Thanjavur Kalyana Sambar Recipe in Tamil: தமிழ்நாடு உணவுகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதன் சுவைக்காகவும், தனித்துவத்திற்காகவும் பிரபலமானவை. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு உணவென்றால் அது சாம்பார்தான். அனைத்து தமிழ்நாட்டு வீடுகளிலும் வாரத்திற்கு இரண்டு நாளாவது சாம்பார் நிச்சயம் இருக்கும்.

சாம்பாரிலும் டிபன் சாம்பார் மற்றும் சாதத்திற்கான சாம்பார் என்று இரண்டு உள்ளது. இந்த இரண்டு சம்பாரிலும் பல்வேறு காய்கறிகள் சேர்த்து பல சாம்பார்கள் தயாரிக்கலாம். வீடுகளில் வழக்கமாக செய்யும் சாம்பாரை விட கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் சாம்பார் மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக தஞ்சாவூர் பகுதிகளில் கல்யாண சாம்பார் மிகவும் பிரபலமானதாகும். இந்த அட்டகாசமான சாம்பாரை நீங்கள் சாப்பிட இனி தஞ்சாவூர் கல்யாணத்திற்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்களே வீட்டில் எளிதில் செய்து விடலாம்.

Thanjavur Kalyana Sambar Recipe How to Make Thanjavur Kalyana Sambar

உங்களுக்கு தஞ்சாவூர் கல்யாண சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் காய்கறிகள்(பூசணிக்காய், முருங்கைக்காய் போன்றவை)
- ஒன்றரை ஸ்பூன் சாம்பார் தூள்
- ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி
- தேவையான அளவு உப்பு
- ¼ கப் வேகவைக்காத துவரம்பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- ½ ஸ்பூன் வெல்லம்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி

வறுத்து அரைக்க:

- 1 டீஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- அரை ஸ்பூன் வெந்தயம்
- 3 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 5 கருப்பு மிளகு
- 2 டீஸ்பூன் தேங்காய்
- 2 டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை:

- காய்கறிகளை விரும்பிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும், புளியை ஊறவைத்து 2 கப் புலி தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- ஒரு 1/4 கப் துவரம்பருப்பை போதுமான தண்ணீர் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

- வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் தேங்காயைத் தவிர அனைத்தையும் ஒரு கடாயில் சேர்த்து 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

- அரைத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

- சாம்பார் பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.

- பின்னர் காய்கறிகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும், காய்கறி பாதி வெந்ததும் புளி தண்ணீர் சேர்க்கவும்.

- புளி தண்ணீர் கொதித்ததும் சாம்பார் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து, காய்கறிகள் வேகும் வரை சிறிது நேரம் கொதிக்க விடவும்.

- பின்னர் வேக வாய்த்த துவரம்பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

- பருப்பு நன்றாக கொதித்ததும் அதில் வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.

- நன்கு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்.

- இறுதியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்தால் சுவையான தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, March 6, 2026, 18:06 [IST]
Desktop Bottom Promotion