நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!

Posted By:

Nookkal Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் நூக்கலை வாங்கினால், அதை எப்போதும் சாம்பார் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை குருமா செய்யுங்கள். இந்த குருமா சிக்கன், மட்டன் குருமாவைப் போன்ற சுவையில் இருப்பதோடு, அனைத்து விதமான டிபன் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Nookkal Kurma How To Make Turnip Kurma Recipe

நூக்கல் இப்படி குருமாவாக செய்யும் போது, நூக்கல் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம்.

உங்களுக்கு நூக்கல் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நூக்கல் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* நூக்கல் - 1/4 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 3 டேபிள் ஸ்பூன்
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* பிரியாணி இலை - 1
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் நூல்கோலை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன்பின் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலையை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒருமுறை கிளறி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நூக்கல்லை சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறி, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான நூக்கல் குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 22, 2026, 21:18 [IST]
Desktop Bottom Promotion