ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Pidikarunai Kizhangu Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு புளிக்குழம்பு ரொம்ப பிடிக்குமா? உங்கள் வீட்டில் பிடிக்கருணைக் கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த பிடிக்கருணை கிழங்கு கொண்டு புளிக்குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த புளிக்குழம்பை இந்த பக்குவத்தில் செய்தால், பின் அடிக்கடி இந்த மாதிரி தான் செய்வீர்கள்.

உங்களுக்கு பிடிக்கருணைக் கிழங்கு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிடிக்கருணைக் கிழங்கு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Pidikarunai Kizhangu Kuzhambu How To Make Pidi Karunai kizhangu Kulambu

தேவையான பொருட்கள்:

* பிடிக்கருணைக் கிழங்கு - 300 கிராம்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 7 பல்
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பிடிக்கருணைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தோலுரித்து, அதை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பார் தூள், மல்லித் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வேக வைத்து துண்டுகளாக்கி வைத்துள்ள பிடிக்கருணைக்கிழங்கை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பிடிக்கருணைக் கிழங்கு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 3, 2026, 14:03 [IST]
Desktop Bottom Promotion