ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Ragi Pachcha Payaru Dosa With Onion Chutney Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் எடை இழப்பு பயணத்தின் போது ஒரு சத்தான அதே சமயம் சுவையான காலை உணவை சாப்பிட்டு எடையை குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் நிறைந்த ராகி பச்சை பயறு தோசையை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசைக்கு வெங்காய சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். முக்கியமாக இந்த டிபன் காம்போ சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

Ragi Pachcha Payaru Dosa With Onion Chutney How To Make This Diabetic Friendly Breakfast

உங்களுக்கு இந்த ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பச்சை பயறு தோசை மற்றும் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தோசைக்கு..

* ராகி - 1 கப்
* பச்சை பயறு - 1/2 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* இஞ்சி - 1 துண்டு
* பச்சை மிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு

வெங்காய சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
* பூண்டு - 12 பல்
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - சிறிது
* தண்ணீர் - சிறிது

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி, பச்சை பயறு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 4 மணிநேரம் கழித்து ஊற வைத்த பொருட்களை கழுவி, மிக்சர் ஜாரில் முதலில் பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் மீதமுள்ள பொருட்களை மீண்டும் ஜாரில் எடுத்துக் கொண்டு, அளவாக நீரை ஊற்றி, அதையும் மென்மையாக அரைத்து, மாவுடன் சேர்த்துக் கொண்டு நன்கு கலந்து விட வேண்டும்.
* ஒரு வேளை மாவு கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அரைத்த மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் அல்லது நெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ராகி பச்சை பயறு தோசை தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு பற்கள், வரமிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான வெங்காய சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 24, 2026, 6:46 [IST]
Desktop Bottom Promotion