செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்

Posted By:

Chettinad Kondakadalai Kurma Recipe in Tamil: காலை மற்றும் இரவு உணவுகளைப் பொறுத்தவரை என்ன சமைக்கிறோம் என்பதை விட அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதே மிகப்பெரிய கவலையாக இருக்கும். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சட்னி அல்லது குருமா போன்றவற்றைத்தான் செய்வோம். ஆனால் எத்தனை நாளுக்குத்தான் அதையே செய்து கொண்டிருப்பது.

Chettinad Kondakadalai Kurma Recipe How to Make at Home in Tamil

புதியதாக ஏதாவது செய்ய விரும்புகிறவர்கள் செட்டிநாடு ஸ்டைல் கொண்டைக்கடலை குருமா செய்யலாம். காரசாரமான இந்த குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் இடியாப்பம் போன்றவற்றுக்கு மட்டுமின்றி தாளித்த சாத வகைகளுக்கு அருமையாக இருக்கும். இந்த செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா அட்டகாசமான சுவையுடன் இருப்பதுடன் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். குறிப்பாக இந்த குருமா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையில் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் கொண்டைக்கடலை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊறவைக்க:

- 1/4 கப் கொண்டைக்கடலை
- 1 கப் தண்ணீர்

வேகவைக்க:

- 1 1/2 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு

அரைக்க:

- 3 ஸ்பூன் தேங்காய்
- 1 ஸ்பூன் தனியா
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 6 காய்ந்த மிளகாய்
- 1/2 ஸ்பூன் மிளகு
- 1 இன்ச் பட்டை
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 பெரிய தக்காளி
- 4 சின்ன வெங்காயம்
- 3 பல் பூண்டு
- தேவையான அளவு தண்ணீர்

குழம்பு வைக்க:

- 4 கத்திரிக்காய்
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 10 சின்ன வெங்காயம்
- 1/2 கப் நீர்த்த புளிக்கரைசல்

செய்முறை:

- முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். ஊறவைத்த கொண்டைக்கடலை, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரில் 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் மல்லி விதைகள், சீரகம், மிளகு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

- அதனுடன் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து, தக்காளி சற்று மசியும் வரை வதக்கவும்.

- உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி ஆறவிடவும்.

- ஆறியதும் இதை மிக்சி ஜாரில் போட்டு முதலில் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

- ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

- அதில் கடுகு மற்றும் சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.

- அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து, அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

- பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பிறகு வேகவைத்த கொண்டைக்கடலை, தண்ணீர், புளிக்கரைசல், நறுக்கிய கத்தரிக்காய், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.

- குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவைத்து, தானாகவே ஆவி அடங்கும் வரை காத்திருக்கவும்.

- இறுதியாக 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்தால் சுவையான செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெடி.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 23, 2026, 22:14 [IST]
Desktop Bottom Promotion