இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி, சாம்பார் செய்யாம.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Brinjal Masiyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று சுவையான, அதே சமயம் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு மசியல் செய்யுங்கள்.

இந்த கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மசியல் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். சொல்லப்போனால், இந்த சைடு டிஷ்ஷை செய்தால், வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் இந்த மாதிரியான ரெசிபிக்களை தெரித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதோடு பேச்சுலர்களும் இதை முயற்சி செய்யலாம்.

Kathirikai Masiyal How To Make a Brinjal Masiyal Recipe

உங்களுக்கு கத்திரிக்காய் மசியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் மசியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* வரமிளகாய் - 2
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* கத்திரிக்காய் - 1/2 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு- 1/2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 3 பச்சை மிளகாய் மற்றும் 2 வரமிளகாய் என உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சேர்த்து, அவை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* பிறகு குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் முடியைத் திறந்து, மத்து கொண்டு கலவையை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின் மசித்த கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மசியலை, ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கத்திரிக்காய் மசியலுடன் சேர்த்து கலந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, March 24, 2025, 8:13 [IST]
Desktop Bottom Promotion