புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்!

Posted By:

Andhra Style Pudalangai Thokku in Tamil: புடலங்காய் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான காய்கறியாகும். இதுவரை நீங்கள் புடலங்காயைக் கொண்டு கூட்டு, பொரியல் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த புடலங்காயை வைத்து ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்திருக்கிறீர்களா? உண்மைதான், புடலங்காய வைத்து ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான தொக்கு செய்யலாம். இந்த புடலங்காய் தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் புடலங்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு புடலங்காய் இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்து கொடுங்கள். இது நிச்சயம் அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த புடலங்காய் தொக்கின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் சில பொருட்கள்தான்.

Pudalangai Thokku Recipe How to Make Andhra Style Pudalangai Thokku

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் புடலங்காய் தொக்கு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் புடலங்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 கப் நறுக்கிய புடலங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 அரைத்த தக்காளி
- 1 கப் புளி தண்ணீர்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
- 2 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
- 2 ஸ்பூன் எள்
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்

அரைக்க:

- 3 பல் பூண்டு
- 1 அங்குல இஞ்சி
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்

செய்முறை:

- முதலில் வேர்க்கடலை, தேங்காய் மற்றும் எள்ளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, மென்மையான பேஸ்ட்டாக அரைத்து தனியாக வைக்கவும்.

- அதேபோல வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது அரைத்து தனியாக வைக்கவும்.

- நறுக்கிய புடலங்காயை ஒரு பிரஷர் குக்கரில் போட்டு ஒரு விசில் மட்டும் விட்டு அடுப்பை அணைக்கவும். விசில் வந்த பிறகு, உடனடியாக பிரஷரை வெளியேற்றவும்.

- ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி, சீரகம், கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

- கடுகு வெடித்ததும், வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் அரைத்த தக்காளி சேர்த்து, தக்காளி கொதிக்க ஆரம்பிக்கும் வரை 2 நிமிடங்கள் வதக்கவும்.

- பின் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் பொடித்த வேர்க்கடலை-எள் கலவையைச் சேர்க்கவும். தொடர்ந்து கிளறி, சுமார் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

- பின்னர் புளி தண்ணீர், வேகவைத்த புடலங்காய் மற்றும் உப்பு சேர்த்து, குழம்பு கெட்டியாகும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

- இறுதியாக அடுப்பை அணைத்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, March 5, 2026, 20:22 [IST]
Desktop Bottom Promotion