புத்திசாலி குழந்தைங்க வேணுமா?..ஜங்க் ஃபுட் கொடுக்காதீங்க!

By Mayura Akilan

Child Care
குழந்தைகள் புத்திசாலிகளாகவும், நுண்ணறிவுத்திறன் நிறைந்தவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர்கள் பகீரத பிரயத்தனம் செய்வர். குழந்தைகளை புத்திசாலிகளாக நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் உங்கள் குழந்தைகளும் அறிவாளிகளாக மாறுவார்கள்.

தாய்ப்பால் அவசியம்

9 மாதம் வரை தாய்பால் அருந்தும் குந்தைகளுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும் என்று மூளை நரம்பியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வேண்டுமெனில் ஒருவருடம் வரை கூட தாய்ப்பால் தரலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஊட்டச்சத்துணவு தேவை

குழந்தைகளின் உடல் நலனிற்கும் கற்கும் திறனுக்கும் அதிக தொடர்பு இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் கிரகிக்கும் திறன் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இசையோடு இணைந்த கல்வி

குழந்தைகளின் அறிவுத்திறனில் இசை முக்கிய பங்கு வகிப்பமாக டொரான்டோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இசை ஆர்வத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் புத்திக்கூர்மை அதிகரிக்குமாம்.

காலை உணவு

காலை உணவு கண்டிப்பாக கொடுக்கவேண்டும். பெரும்பாலான குழந்தைகள் பள்ளி செல்லும் அவசரத்தில் அவர்களின் காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர் எனவே குழந்தைகளுக்கு காலை உணவோடு ஒரு டம்ளர் பால் கொடுப்பது மூளை வளர்ச்சியை அதிகரித்து அவர்களை உற்சாகப்படுத்தும்.

ஜங்க் ஃபுட் ஆபத்து

பர்கர், பீட்ஸா போன்ற கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தருவது அவர்களின் புத்திக்கூர்மையை மழுங்கடிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், மூளை வளர்ச்சிக்கும் ஏற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

வாசிக்கும் திறன்

குழந்தைகளின் வாசிக்கும் திறனை ஊக்கப்படுத்தவேண்டும். இது அவர்களின் ஐ க்யூ அதிகரிக்கும் முக்கிய வழிகளில் ஒன்றாகும். எனவே சிறிய லைப்ரரி ஒன்றை உருவாக்கி அதில் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கித்தரலாம். அது அவர்களின் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

புத்திக்கூர்மை விளையாட்டு

குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைத்து அவர்களை சோம்பேறியாக்குவதை விட அவர்களுக்கு கற்பனை திறனை அதிகரிக்கும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தலாம். அவர்கள் யோசித்து விளையாடும் விளையாட்டுச் சாமான்களை வாங்கித்தராலாம் என்பது குழந்தை நல மருத்துவர்களின் ஆலோசனையாகும். குறுக்கெழுத்துப்போட்டி, எண் விளையாட்டு போன்றவை குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும்.

Story first published: Wednesday, February 15, 2012, 16:58 [IST]
Desktop Bottom Promotion