செஃப் ஷான்ஜித் ஸ்பெஷல் தக்காளி தம்புலியை எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Tomato Thambuli Recipe In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெயில் காலம் வந்தாலே பலருக்கும் சாப்பிட பிடிக்காது. அப்படியே சாப்பிட்டாலும் காரம் இல்லாதவாறு தான் சாப்பிட தோன்றும். அப்படி காரம் அதிகம் இல்லாத, அதே சமயம் கொளுத்தும் வெயிலில் உடலுக்கு இதமாக இருக்கும்படியான ஒரு குழம்பு என்றால் அது மோர் குழம்பு தான்.

இந்த மோர் குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு மிகவும் சுவையாகவும் இருக்கும். சொல்லப்போனால் மதிய வேளையில் சட்டென்று சமையலை முடிக்க நினைத்தால், இந்த மோர் குழம்பை செய்யலாம். இப்படிப்பட்ட மோர் குழம்பில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் தக்காளியை வைத்து செய்யக்கூடியது தான் தக்காளி தம்புலி என்னும் தக்காளி மோர் குழம்பு.

Tomato Thambuli Chef Litwin Shanjit Shares How To Make Thakkali Mor Kuzhambu Recipe

இந்த தக்காளி தம்புலியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் செய்வார்கள். பிரபல செஃப் ஷான்ஜித் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தக்காளி தம்புலியை எப்படி செய்வதென்று பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த தக்காளி தம்புலியின் எளிய செய்முறையை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படித்து தெரிந்து, அதை செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மோர் - 1 கப்

வதக்கி அரைப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* பெரிய தக்காளி - 1
* பொடியாக நறுக்கிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மோரை நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பெரிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்ததை அடித்து வைத்துள்ள மோருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி இறக்கி, மோருடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* கடைசியாக சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்தால், சுவையான தக்காளி தம்புலி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 1, 2026, 14:41 [IST]
Desktop Bottom Promotion