Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் டாப் 10 தொகுதிகள் என்னென்ன தெரியுமா?

Tamil Nadu Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகின்றன. ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் மே 04 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் 234 தொகுதிகளுக்கும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த தேர்தல், ஒரு நான்கு முனைப் போட்டியாக இருக்கப்போகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் இந்த தேர்தலை எதிர்கொள்ள ஒரு வலுவான காரணம் உள்ளது. 234 தொகுதிகளும் தேர்தல் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தாலும் அடுத்த 5 ஆண்டுக்கு தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போவது குறிப்பிட்ட தொகுதிகள்தான். இந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் அல்லது அது அமைந்துள்ள இடம் போன்றவை இந்த தொகுதிகளை தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளன. அவை எந்தெந்த தொகுதிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Tamil Nadu Election 2026 Top 10 Constituencies That Plays Key Role in Tamil Nadu Election 2026

கொளத்தூர்

இந்த தொகுதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சொந்தத் தொகுதி என்பதால், மாநிலத்திலேயே அனைவராலும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும் தொகுதியாக உள்ளது. ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியிலிருந்தே போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அ.தி.மு.க. நேரடியாகக் களமிறங்குகிறது. மேலும் கொளத்தூர் தொகுதியுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பக்கத்துக்கு தொகுதியான பெரம்பூரில், நடிகர் விஜய் போட்டியிடுவது அரசியல் களத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.

பெரம்பூர்

வட சென்னையில் அமைந்துள்ள பெரம்பூர், முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியை ஒட்டி அமைந்துள்ள, பாரம்பரியமாக திமுகவின் கோட்டையாக உள்ளது. தவெக தலைவர் விஜய் இந்த தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி ஒரு போர்க்களமாக இருக்கப்போகிறது. திமுக ஆர்.டி. சேகரை வேட்பாளராக நிறுத்தி, இந்தத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த தொகுதியை பாமகவுக்கு வழங்கியுள்ளது. பெரம்பூர் ஒரு பகுதி நகர்ப்புறத் தொகுதியாகவும், கணிசமான உழைக்கும் மக்களைக் கொண்டதாகவும் இருப்பதால், வலிமைமிக்க திமுக வேட்பாளரையும், விஜய் போன்ற கவர்ச்சிகரமான ஆளுமையையும் பாமக எதிர்கொள்ள வேண்டும்.

எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். பழனிசாமி, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராகத் திகழ்கிறார். ஒருவேளை இந்த தொகுதியில் அவர் தோல்வியடைந்தால், அது அதிமுகவின் இமேஜில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே திமுகவும், இந்த தொகுதியில் ஒரு வலிமையான வேட்பாளரை அறிவித்துள்ளது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி, 2023-ஆம் ஆண்டில் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார், இவர் திமுகவின் அடுத்த தலைமுறை முகமாகக் கருதப்படுகிறார். இத்தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இந்த தேர்தல் வெற்றி என்பது உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

மயிலாப்பூர்

பாஜக அதிமுக கூட்டணியில் பெற்றுள்ள 27 தொகுதிகளில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் மயிலாப்பூர் தொகுதியும் அடங்கும். சென்னையில், பாஜக அதிக வாக்குப் பெற்ற ஒரே தொகுதி இது மட்டும்தான். சென்னையில் பாஜக போட்டியிடுவதால் இது அதிக அழுத்தம் கொண்ட தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பாக டி.வேலுவை நிறுத்தியுள்ளது.

கோவை தெற்கு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது கோட்டையான கரூர் தொகுதியிலிருந்து மாறி இந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப்போகிறார். இந்த தொகுதியில் அவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பது, திமுகவின் ஒரு துணிச்சலான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு இத்தொகுதியில் வெற்றி பெற்ற, பாஜகவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை வடக்குத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில், இது தற்போது திமுகவுக்கும் NDA/அதிமுக கூட்டணிக்கும் இடையிலான நேரடி மோதலாக மாறியுள்ளது.

மன்னார்குடி

டெல்டா பகுதியில் உள்ள மன்னார்குடி தொகுதி அமமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி, கடந்த மூன்று முறை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வசம் உள்ள திமுகவின் கோட்டையாகும். மூன்று முறை திமுகவின் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு எதிராக டி.டி.வி. தினகரனின் அமமுக இங்கு போட்டியிடுவது தமிழக அரசியல் களத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அமமுகவுக்கும் இந்த தொகுதியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. இங்கு நிகழும் மாற்றம், டெல்டா அரசியலை மாற்றி அமைக்கும்.

போடிநாயக்கனூர்

சமீபத்தில் திமுகவில் இணைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த காலத்தில் அ.தி.மு.க-வின் தலைவராகப் பதவி வகித்த அவர் தற்போது திமுக சார்பாக போட்டியிடுவது தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றமாகும். அவருக்கு தனிபட்ட செல்வாக்கு இருந்தபோதிலும் திமுக சின்னத்தில் அவர் போட்டியிடும் போது அதன் முடிவு எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள தமிழ்நாடே ஆர்வமாக உள்ளது.

காரைக்குடி

தென் மாவட்டங்களில், தினகரன் ஏற்கனவே கணிசமான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் காரைக்குடி மற்றும் வேறு சில தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது. அதேசமயம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்களும் இந்த தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

காட்டுமன்னார் கோவில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார். அவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில் தற்போது அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசியலுக்கு திருமாவளவன் அவர்கள் திரும்புவது தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, March 31, 2026, 21:17 [IST]
Desktop Bottom Promotion