1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Kambu Kichadi Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சத்தான அதே சமயம் ருசியான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கம்பு உள்ளதா? அப்படியானால் அந்த கம்பு கொண்டு கிச்சடி செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த கிச்சடியுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து செய்யும் போது, இந்த கிச்சடி இன்னும் சத்தான மற்றும் ருசியான காலை உணவாக இருக்கும்.

Kambu Kichadi How To Make Pearl Millet Kichadi Recipe

நீங்கள் எப்போதும் கம்பு கொண்டு கஞ்சி மட்டும் தான் செய்து சாப்பிட்டிருந்தால், ஒருமுறை இப்படி கிச்சடி செய்து சாப்பிடுங்கள். நிச்சயம் இந்த கிச்சடி உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த கம்பு கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (நறுக்கியது)
* பச்சை பட்டாணி - சிறிது
* கம்பு - 1/4 கப் (இரவு முழுவதும் ஊற வைத்தது)
* பாசிப்பருப்பு - 1/4 கப் (1 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 2 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் கம்பை கழுவி, நீரில் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாசிப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள கம்பை கழுவி சேர்த்து, அத்துடன் பாசிப்பருப்பையும் கழுவி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான கம்பு கிச்சடி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 14, 2026, 7:36 [IST]
Desktop Bottom Promotion