பச்சை பட்டாணி பூரியும்.. உருளைக்கிழங்கு மசாலாவும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Green Peas Poori With Potato Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பூரி ரொம்ப பிடிக்குமா? எப்போதும் ஒரே மாதிரி ப்ளைன் பூரி தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை பச்சை பட்டாணி பூரியை செய்து சாப்பிடுங்கள். இந்த பூரி சற்று பச்சை நிறத்தில் இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பூரிக்கு உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலாவை சைடு டிஷ்ஷாக செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பட்டாணி பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பட்டாணி பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Green Peas Poori With Potato Masala How To Make Pachai Pattani Poori With Potato Masala

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* பச்சை பட்டாணி - 100 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்

பூரி மாவிற்கு..

* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* அரைத்த பச்சை பட்டாணி
* தண்ணீர் - தேவையான அளவு

தேங்காய் விழுதிற்கு...

* தேங்காய் - 1/4 மூடி
* பச்சை மிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

மசாலா தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 150 கிராம்
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவை மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சைடு டிஷ் செய்து கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக 2 நிமிடம் வதக்கி, 1 டம்ளர் நீரை ஊற்றி 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, அத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* 8 நிமிடம் கழித்து, வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, பூரியாக தேய்த்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை சேர்த்து பொரித்து எடுத்தால், பச்சை பட்டாணி பூரி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, March 30, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion