1 கப் தயிர் இருந்தா போதும்.. 5 நிமிடத்தில் சிம்பிளான குழம்பு செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க..

Posted By:

Quick Morkuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் சிம்பிளா சமையலை முடிக்க நினைக்குறீங்களா? அதுவும் வெறும் 5 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? உங்கள் வீட்டில் 1 கப் தயிர் உள்ளதா? அப்படியானால் அந்த தயிரைக் கொண்டு 5 நிமிடத்தில் அட்டகாசமான சுவையில் ஒரு குழம்பு செய்யலாம்.

குறிப்பாக இந்த குழம்பிற்கு காய்கறிகள் எதுவும் தேவைப்படாது. இந்த மோர் குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக பேச்சுலர்கள் கூட இந்த மோர்குழம்பை செய்யலாம். இப்படி குழம்பை செய்யும் போது குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Morkulambu How To Make a Quick Morkuzhambu Recipe

உங்களுக்கு மோர்குழம்பை 5 நிமிடத்தில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மோர்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளிப்பில்லாத தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
* பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 4
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தயிரை எடுத்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் முழுதாக சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* இறுதியாக அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொதிக்க விடாமல் வெறும் 2 நிமிடம் சூடேற்றி, பின் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான மோர்குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, July 5, 2025, 13:00 [IST]
Desktop Bottom Promotion