கொத்தமல்லியும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி ஒருடைம் சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..

Posted By:

Kothamalli Karuveppilai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் சட்னியை தான் செய்வீர்களா? ஆனால் ஒரே சட்னியை செய்து போரடித்துவிட்டதா?

உங்கள் வீட்டில் கொத்தமல்லியும், கறிவேப்பிலையும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அருமையான சுவையில் கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

Kothamalli Karuveppilai Chutney How To Make a Coriander Curry Leaves Chutney

உங்களுக்கு கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 50 கிராம்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* புளி - 2 இன்ச்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 3 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் 5 பச்சை மிளகாய் மற்றும் 50 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 கைப்பிடி கொத்தமல்லி மற்றும் 1 கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 27, 2025, 7:43 [IST]
Desktop Bottom Promotion