தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?

Venni Karumbeswarar Temple: உலகளவில் அச்சுறுத்தி வரும் ஒரு பொதுவான பிரச்சனை தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய். முன்பெல்லாம் இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போதோ வீட்டிற்கு ஒருவர் இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அளவில் பெருகியுள்ளது.

இந்த சர்க்கரையை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்து வந்தால், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமையான கோயில் ஒன்றிற்கு சென்றால் சர்க்கரை நோய் முழுமையாக குணமடையும் என்பது தெரியுமா?

Why This 1300-Year-Old Sugar Temple in Tamil Nadu Is Believed to Cure Diabetes

பொதுவாக எந்த ஒரு நோயும் ஒருவரது கர்ம வினையின் பயனாக உருவாகி, அது கடவுளின் அருளால் கட்டுப்படும் என்பது ஆன்மீக நம்பிக்கை. அந்த வகையில் திருவெண்ணியூரில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவெண்ணி கரும்பேஸ்வரரை வழிபாடு செய்தால் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம் என மக்களால் உறுதியாக நம்பப்படுகிறது.

ஸ்ரீவெண்ணி கரும்பேஸ்வரர் கோயில் எவ்வளவு பழமையானது?

இந்தியாவில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலேயே வித்தியாசமான ஒரு சிவ ஸ்தலம் தான் ஸ்ரீவெண்ணிக்கரும்பேஸ்வரர் திருக்கோயில். இந்த கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கமானது கரும்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்தது போன்று இருக்கும். சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோயில் சுமார் 4 யுகங்களாக இருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆனால் புராணங்களிலோ இந்த திருக்கோயில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருப்பதாக கூறப்படுகிறது.

Why This 1300-Year-Old Sugar Temple in Tamil Nadu Is Believed to Cure Diabetes

கோயில் வரலாறு

பழங்காலத்தில் இந்த கோயில் உள்ள இடமானது கரும்புக் காடாக இருந்ததாம். ஒரு நாள் இரண்டு முனிவர்கள் இந்த கரும்பு காட்டின் வழியாக யாத்திரை செல்லும் போது, கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி இருந்ததைக் கண்டு, அதை பூஜித்து வழிபாடு செய்துள்ளனர். அப்போது அவர்களுள் ஒருவர் இங்குள்ள தலவிருட்சம் கரும்பு எனவும், மற்றொருவர் வெண்ணி என்று அழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றும் வாதிட்டுள்ளனர்.

அப்போது இறைவன் அசரீரியாக தோன்றி, 'எனது பெயரில் கரும்பும், தல விருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்' என்று கூறியதாகவும், அன்று முதல் இத்தலத்தின் இறைவன் கரும்பேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த பெயருக்கு ஏற்ப சுயம்புவாக தோன்றிய சிவலிங்கமானது கரும்பு கட்டாக இருப்பது போன்று மேடுபள்ளமாக காட்சியளிப்பார். இதை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது நாம் நன்கு காணலாம்.

மேலும் இந்த சிவலிங்கத்தின் மேல் வலது பக்கத்தில் வெட்டுபட்டது போன்று இருக்கும். கரும்புக்காட்டில் மறைந்திருந்த சிவலிங்கத்தை முசுகுந்த சக்ரவர்த்தி கண்டறிந்து, அவருக்கு கோயில் கட்ட அங்குள்ள கரும்புகளை வெட்டும் போது, அது லிங்கத்தில் பட்டு இரத்தம் கசிந்துள்ளது. இதைக் கண்ட முசுகுந்த சக்ரவர்த்தி இந்த சிவலிங்கத்திற்கு சதுர ஆவுடையார் அமைத்து கருவறை எழுப்பி கோயில் அமைத்ததாக வரலாறு கூறுகிறது.

வெண்ணி கரும்பேஸ்வரர் கோயிலின் சிறப்பு

ஸ்ரீவெண்ணி கரும்பேஸ்வரர் கோயிலின் தலவிருட்சமாக இருக்கும் நந்தியாவட்ட பூ சிவனுக்கு உரிய அர்ச்சனை பூக்களில் மிகவும் முக்கியமானதாகும். சித்தர்களின் பாடல்களில் கூட இந்த கோவிலில் சர்க்கரை நோய்க்கான பரிகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் வெண்ணி கரும்பேஸ்வரர் சர்க்கரை நோயை தீர்ப்பது குறித்து பாடியுள்ளார்.

ரசமணியோடு வெல்லம் கலந்து கோவிலை வலம் வந்து கரும்பேஸ்வரருக்கு நிவேதனம் செய்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும் என்று காகபுஜண்ட சித்தர் பாடியுள்ளார். ஆனால் தற்போதைய காலத்தில் ரசமணியை வாங்கி படைத்து வழிபடுவது என்பது சாத்தியம் அல்ல. எனவே மக்கள் தங்களால் முடிந்த ரவையை சர்க்கரையோடு கலந்து இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்கின்றனர்.

அப்படி படைக்கும் போது, அது அங்குள்ள எறும்புகளுக்கு உணவாகிறது. அப்படி எறும்புகள் உட்கொள்ளும் போது, அதை இறைவன் ஏற்றுக் கொண்டு, சர்க்கரை நோயில் இருந்து விடுவிப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த கோயிலில் அன்னதானத்திற்கு அரிசியும், வெல்லமும் வாங்கி கொடுப்பதும், சர்க்கரை நோய்க்கான பரிகாரமாக கூறப்படுகிறது.

Why This 1300-Year-Old Sugar Temple in Tamil Nadu Is Believed to Cure Diabetes

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு வந்து சென்ற பின், ஏராளமான பக்தர்கள் தங்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதை கண்டுள்ளனர். இதனால் இன்று வரை ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சர்க்கரை நோய் குணமாக வேண்டுமென்று கரும்பேஸ்வரருக்கு ரவையும், சர்க்கரையையும் வாங்கி படைத்து, வழிபாடு செய்து வருகின்றனர்.

வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில் எங்கு உள்ளது?

வெண்ணி கரும்பேஸ்வரர் கோயிலானது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செல்லும் வழியில் "கோயில்வெண்ணி" என்னும் ஓர் ஊரில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஊர் தஞ்சாவூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது.

Story first published: Tuesday, March 10, 2026, 21:59 [IST]
Desktop Bottom Promotion