முட்டையை வெச்சு கொங்குநாடு ஸ்டைலில் முட்டை பெப்பர் குருமா செய்யுங்க.. சும்மா அள்ளும்..

Posted By:

Kongunadu Egg Pepper Kurma Recipe: நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டையை சமைப்பீர்களா? எப்போதும் முட்டையைக் கொண்டு ஒரே மாதிரி தான் சமைத்து சாப்பிடுவீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா?

அதுவும் நீங்கள் சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், கொங்குநாடு முட்டை பெப்பர் குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். இந்த குருமாவின் ஸ்பெஷலே மசாலாவை அரைத்து செய்வது தான்.

Kongunadu Egg Pepper Kurma Recipe

உங்களுக்கு கொங்குநாடு முட்டை பெப்பர் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு முட்டை பெப்பர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலாவிற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* புளி - 1/2 இன்ச் துண்டு
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

முட்டையை வறுக்க..

* நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* வேக வைத்த முட்டை - 5
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் மசாலாவை தயாரித்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, பட்டை, மல்லி விதைகள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, புளித் துண்டையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு கசகசா மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூளை சேர்த்து சில நொடிகள் வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்துள்ள முட்டைகளை எடுத்து அதில் ஆங்காங்கு கீறி விட்டு, வாணலியில் போட்டு, சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து சில நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வறுத்த முட்டைகளை கொதித்துக் கொண்டிருக்கும் குருமாவுடன் சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொங்குநாடு ஸ்டைல் முட்டை பெப்பர் குருமா தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 25, 2023, 14:08 [IST]
Desktop Bottom Promotion