கல்யாண வீட்டு வெஜ் குருமா ருசியா இருப்பதன் ரகசியம் இதுதான்.. தெரிஞ்சு ட்ரை பண்ணி பாருங்க...

Posted By:

Kalyana Veetu Veg Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு தினமும் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக இருக்குமா?

அதுவும் நீங்கள் அடிக்கடி வெஜ் குருமாவை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வெஜ் குருமா செய்வதாக இருந்தால் கல்யாண வீட்டு ஸ்டைலில் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, குருமா இன்னும் பிரமாதமாக இருக்கும்.

Kalyana Veetu Veg Kurma How To Make a Veg Kurma Recipe

உங்களுக்கு கல்யாண வீட்டு வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு வெஜ் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு..

* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 15 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
* காலிஃப்ளவர் - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்

குருமா தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 5
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* புதினா - 5 இலைகள்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
* கெட்டி தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கெட்டி தேங்காய் பால் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1 மூடி
* முந்திரி - 8
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் இட்லி தட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி மற்றும் சுடுநீரில் போட்டு எடுத்த காலிஃப்ளவரை போட்டு, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் 5 புதினா இலைகளை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 30 நொடிகள் கிளறி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறி மசாலா தூளை சேர்த்து கிளறி, பின்பு கெட்டி தயிரை சேர்த்து, எண்ணெய் பிரிய வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு, பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமாவில் இருந்து பச்சை வாசனை போனதும், அதில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 1 நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கல்யாண வீட்டு வெஜ் குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 17, 2026, 22:30 [IST]
Desktop Bottom Promotion