பச்சை பட்டாணியும், உருளைக்கிழங்கும் வெச்சு.. இப்படி குருமா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்..

Posted By:

Green Peas Potato Kurma Recipe In Tamil: தற்போது பச்சை பட்டாணி சீசன் என்பதால் விலைக் குறைவில் கிடைக்கும். இந்த பச்சை பட்டாணியை சீசன் இருக்கும் போதே சாப்பிட்டால் தான் உண்டு. மற்ற காலங்களில் காய்ந்த பட்டாணியை தான் சாப்பிட முடியும். எனவே, மிஸ் பண்ணிடாதீங்க..

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்கள் என்றால், அந்த சப்பாத்திக்கு பச்சை பட்டாணியுடன், உருளைக்கிழங்கை சேர்த்து, குருமா செய்யுங்கள். இப்படி குருமா செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த குருமா சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

Green Peas Potato Kurma How To Make a Pachai Pattani Potato Kurma

உங்களுக்கு பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* பூண்டு - 5 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 5

குருமாவிற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (துண்டுகளாக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1 கப்
* உருளைக்கிழங்கு - 2
* தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, சோம்பு, மிளகு, கசகசா, பொட்டுக்கடலை, நறுக்கிய தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, மிதமான தீயில் வைத்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை பட்டாணி மற்றும் நறுக்கிய 2 உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 12, 2026, 19:58 [IST]
Desktop Bottom Promotion