ஒருடைம் செட்டிநாடு மிளகாய் மண்டி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. அம்புட்டு ருசியா இருக்கும்..

Posted By:

Chettinad Milagai Mandi Recipe In Tamil: மதிய வேளையில் சாதத்துக்கு சிம்பிளாக, அதே சமயம் சற்று காரசாரமாக ஏதாவது சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரி சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக அதே வேளையில் ருசியான சைடு டிஷ் செய்ய விரும்பினால், செட்டிநாடு மிளகாய் மண்டி செய்யுங்கள்.

இந்த செட்டிநாடு மிளகாய் மண்டி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குளிர்காலத்தில் செய்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். அதுவும் சளி பிடித்திருக்கும் போது இந்த மிளகாய் மண்டியை செய்து சாப்பிட்டால் சளி முறிந்து வெளியேறும். முக்கியமாக இது சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும்.

Chettinad Milagai Mandi How To Make a Chettinad Milagai Mandi Recipe

உங்களுக்கு செட்டிநாடு மிளகாய் மண்டி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மிளகாய் மண்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளி - 1 எலுமிச்சை அளவு
* அரிசி ஊற வைத்து கழுவிய நீர் - சிறிது
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 5
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊற வைத்து பிசைந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்களை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை லேசாக கீறிவிட்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் அரிசி ஊற வைத்து கழுவிய நீரை சிறிது ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போய் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு மிளகாய் மண்டி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 27, 2025, 14:55 [IST]
Desktop Bottom Promotion