டிமென்சியா நோயாளிகளை அன்பா கவனிங்க!

By Mayura Akilan

Dementia
நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன் உள்ளிட்ட மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் ஒருவருக்கு ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பேயே கூட குறைய ஆரம்பித்து விடுகின்றன என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே டிமென்சியா எனப்படும் மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்பாக பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நம் நாட்டில் உள்ள மொத்த ஜனத்தொகையில் 7 கோடிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதானவர்கள் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் 21 லட்சம் மக்கள் (3%) டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கின்றது அந்த கணக்கெடுப்பு. 2050வது ஆண்டில் 60 வயதிற்கு மேற்பட் டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடியாக உயர உள்ள நிலையில் அதற்கேற்றாற் போல் முதியவர்கள் டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக வாய்ப்புண்டு.

டிமென்சியா நோய்

முதுமையில் சிலருக்கு குறைந்த அளவு ஞாபக மறதி மட்டுமே இருக்கும். அவர்களுடைய பேச்சுத்திறன், செயல்திறன் மற்ற நடை, உடை, பாவனைகள் எல்லாமே சரியாகவே இருக்கும். இவர்களில் சரிபாதி மக்களுக்கு, அடுத்த 3முதல் 5 வருடங்களில் டிமென்ஷியா நோயின் மற்ற அறிகுறிகளும் தோன்ற வாய்ப்பு அதிகம் உண்டு. பேச்சுத் திறன் குறைதல், உரையாடல் மாற்றம் தெரிதல், செய்யும் செயலில் குறைகள் ஏற்படுதல், மறதிக் குறைவோடு இதுபோன்ற குறைகளும் அவர்களுக்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வயதான ஆண்களைவிட பெண்களே டிமென்ஷியாவினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்!

நோய்க்கு மருத்துவம்

இரத்தத்தில் ஓமோசிஸ்டின் அளவு அதிகம் உள்ளவர்களை வைட்டமின் சத்து மாத்திரைகள் மூலம் அறிவுத் திறன் வீழ்ச்சியில் இருந்து தடுக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

டிமென்ஷியா ஒரு சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ வரும் நோயல்ல! பல மாதங்களாக அல்லது வருடங்களாக உள்ளிருந்து மறதி மூலம் வெளிப்படுகிற நோய். டிமென்சியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் (Folic Acid) மற்றும் பி12 (Mecobalamin) கலந்த மாத்திரையை, ஒரு நாளுக்கு இரண்டு என்று 6 மாதத்திற்கு கொடுக்கவேண்டும். இதனால் அவர்கள் படிப்படியாக குணமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைத்தல் மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரை மலச்சிக்கலுக்கான மாத்திரை ஞாபகப் பயிற்சிகள் மூளையிலுள்ள திசுக்களுக்கு (Cells) தவறாமல் தூண்டுதலை அளிப்பதின் மூலம் முதுமையில் மறதியை ஏற்படுவதை மெதுவாகக் குறைக்கக் கூடும்.

தனிமையை தவிருங்கள்

தனிமையில் உள்ளவர்களுக்கு மனச்சோர்வும், ஞாபக மறதியும் வர வாய்ப்புகள் அதிகம். தனிமையைத் தவிர்த்து, மற்றவர்களுடன் கலகலப்புடன் இருந்தால், முதுமையில் மனநலம் சீராக இருக்கும்.

தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலம், மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

‘‘உறங்கிக் கிடக்கும் மூளையில் உள்ள திசுக்களை உசுப்பிவிடும் சக்தி தியானத்திற்கு உண்டு’’ என்று பிரபல நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே தினசரி தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் மறதியை வெல்லலாம். அதேபோல் தோட்டக்கலை, சொற்பொழிவு கேட்பது, ஆன்மீகத்தில் ஈடுபடுவதும் சிறந்த மருந்தாகும். மேலும் புரதச்சத்து அதிகமுள்ள உணவு மனநலத்திற்கு நல்லது என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

சகிப்புத்தன்மை அவசியம்

அறிவுத்திறன் வீழ்ச்சிக்கு இன்னமும் தக்க மருந்து கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்குத் தக்க உணவு. அன்பான பராமரிப்பு, தக்க பொழுதுபோக்கு இவற்றை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு மனதாக தாராளமாகத் தர முன் வரவேண்டும். ஆகவே இந்நோய்க்கு தற்பொழுதிற்கு அன்பே மருந்து!

டிமென்ஷியா நோயாளியை கவனிக்க உறவினர்களுக்கு மிகவும் சகிப்புத்தன்மை தேவை. மேலும், செய்யும் உதவிகளை பாசம் கலந்த உள்ளுணர்வோடு செய்வது நல்லது. முதியவரை அடிக்கடி தொட்டுப் பேசிப் பழகுவது அவருக்கு மனதில் ஒரு தன்னம்பிக்கையை ஊட்டும். முதியவரின் தனிமையைத் தவிர்க்க வீட்டிலுள்ள உறவினர்கள் அவரவர் பங்குக்காக சிறிது நேரமாவது முதியவரிடம் பேசுதல் அவருக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, March 29, 2012, 16:08 [IST]
Desktop Bottom Promotion