1 கப் உளுத்தம் பருப்பு இருந்தா.. குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Ulunthu Puttu Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் பலவீனமாக இருக்கிறார்களா? அடிக்கடி கை, கால் வலிக்கிறது என்று கூறுகிறார்களா? அப்படியானால் அவர்களின் உணவில் உளுத்தம் பருப்பை அதிகம் சேர்த்து வாருங்கள். அதுவும் உங்கள் பிள்ளைகள் உளுந்து கொண்டு கஞ்சி, களி என்று ஏதாவது செய்து கொடுத்தால், மிகவும் குறைவாகத் தான் சாப்பிடுவார்களா?

அப்படியானால் அவர்களுக்கு உளுந்து கொண்டு புட்டு செய்து கொடுங்கள். இப்படி உளுந்து கொண்டு புட்டு செய்யும் போது, உங்கள் பிள்ளைகள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவதோடு, மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதுவும் இந்த உளுந்து புட்டுவை காலையில் அல்லது மாலை வேளையில் செய்து கொடுக்கலாம்.

Ulunthu Puttu How To Make a Urad Dal Puttu Recipe

உங்களுக்கு உளுந்து புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு - 1 கப்
* புழுங்கல் அரிசி - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்+1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பை துணியில் துடைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் அரிசியை சேர்த்து, அதையும் பொன்னிறமாக வறுத்து, உளுத்தம் பருப்புடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து, ரவா பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 3/4 கப் நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு சரியான பதத்தில் உள்ளது என்பதை அறிய, மாவை பிடி கொழுக்கட்டை போன்று பிடித்தால், பிடிக்க வர வேண்டும்.
* அடுத்து பெரிய பெரிய ஓட்டை கொண்ட சல்லடையை எடுத்து, அதில் இந்த புட்டு மாவை போட்டு தேய்த்து விட்டு உதிர்த்து விட வேண்டும். இப்படி சலிக்கும் போது, புட்டு மென்மையாக இருக்கும்.
* பின்பு சலித்த புட்டு மாவுடன் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் இட்லி தட்டில் ஒரு துணியை விரித்து, அதில் புட்டு மாவை வைத்து, பின் அந்த தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, புட்டு மாவை ஒரு தட்டில் போட்டு உதிர்த்து விட்டு, அத்துடன் 1/2 கப் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக புட்டுடன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான உளுந்து புட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, December 10, 2025, 20:19 [IST]
Desktop Bottom Promotion