2 கப் சேமியாவும், 3 தக்காளியும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Tomato Semiya Upma Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் காலை டிபனை சுவைக்க நினைக்கிறீர்களா? வீட்டில் சேமியாவும், தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அற்புதமான சுவையில் தக்காளி சேமியா உப்புமாவை செய்யுங்கள். இந்த உப்புமா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

அதுவும் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள், இந்த உப்புமாவை சாப்பிட்டால், வயிறும் நிறையும், எடை இழப்புக்கும் உதவி புரியும். முக்கியமாக இந்த உப்புமா பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறான சுவையில் இருக்கும். ஒருமுறை இப்படி உப்புமா செய்தால், அடிக்கடி இந்த உப்புமாவை செய்து கொடுக்க கேட்பார்கள்.

Tomato Semiya How To Make a Tomato Semiya Upma Recipe

உங்களுக்கு தக்காளி சேமியா உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சேமியா உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தக்காளி - 3
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 3 பல்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* புதினா - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/2 கப்
* சேமியா - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய 3 தக்காளி, 1/2 இன்ச் இஞ்சி, 3 பல் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறி வைத்துள்ள 1 பச்சை மிளகாய் மற்றும் சிறிது புதினாவை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 கப் சேமியாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், நீர் முழுமையாக வற்றி, சேமியா நன்கு மென்மையாக வெந்திருக்கும். பின் அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான தக்காளி சேமியா உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, December 4, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion