கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

Kalyana Veetu Thanjai Vaththa Kulambu Recipe In Tamil: தினமும் ஒரே சுவையில் சாம்பார், குழம்பு செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வாய்க்கு ருசியாக ஒரு குழம்பு செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பை செய்யுங்கள்.

இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பில் தக்காளி சேர்க்காததால் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

Thanjai Vaththa Kulambu How To Make Kalyana Veetu Thanjai Vaththa Kulambu

உங்களுக்கு கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கொத்தவரங்காய் வத்தல் - 100 கிராம்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 100
* சின்ன வெங்காயம் - 150
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* தண்ணீர் - சிறிது
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சற்று கெட்டியாக கரைத்து வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வத்தலை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சாம்பார் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து கலந்து கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் ப்ரை செய்து வைத்துள்ள வத்தலை சேர்த்து கலந்து, மூடி வைத்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 10, 2026, 14:26 [IST]
Desktop Bottom Promotion