மொறுமொறுப்பான தஞ்சாவூர் ஒரப்பு அடையும்.. தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Tanjore Orappu Adai Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், நன்கு காரமாக சாப்பிட தோன்றும். இந்நிலையில் தஞ்சாவூர் ஒரப்பு அடையை செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

இந்த அடை சற்று காரசாரமாக இருப்பதோடு, மிகவும் ருசியானதும், சத்தானதும் கூட. இந்த அடைக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ். ஒருமுறை இந்த அடையும், சட்னியும் செய்தால், வாரம் ஒருமுறை உங்கள் வீட்டில் தவறாமல் செய்வீர்கள்.

Tanjore Orappu Adai How To Make a Orappu Adai With Coconut Chutney Recipe

உங்களுக்கு தஞ்சாவூர் ஒரப்பு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஒரப்பு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அடைக்கு..

* இட்லி அரிசி - 1/2 கப்
* பச்சரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 1/2 கப்
* கருப்பு உளுந்து - 1/4 கப்
* வரமிளகாய் - 10
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 30 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு

சட்னிக்கு...

* சின்ன வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 5
* தேங்காய் - 1 பெரிய மூடி (துருவியது)
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாயை சேர்த்து, நீரை ஊற்றி, குறைந்தது 2 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி பருப்பு ஊறிய பின், அவற்றை நீரில் 2 முறை கழுவி விட வேண்டும்.
* பின்பு கிரைண்டரில் ஊற வைத்த அரிசி பருப்பு மற்றும் வரமிளகாயை சேர்த்து, கொரகொரவென்று ரவா பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நீர் அதிகம் ஊற்றி விட வேண்டாம். அவ்வப்போது லேசாக நீரை தெளித்துவிட்டு அரையுங்கள்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சோம்பு, சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1 கைப்பிடி முருங்கைக்கீரை மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
* பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், கலந்து வைத்துள்ள அடை மாவை ஊற்றி, தட்டையாக தேய்த்து, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் அடைகளாக ஊற்றி எடுத்துக் கொண்டால், தஞ்சாவூர் ஒரப்பு அடை தயார்.
* அதன் பின் இந்த அடைக்கு ஏற்ற ஒரு தேங்காய் சட்னியை செய்யுங்கள். அதற்கு மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அடைக்கு சட்னி சற்று கெட்டியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். எனவே அதற்கேற்றாற் போல் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 9, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion