2 உருளைக்கிழங்கு இருந்தா.. சப்பாத்தி, பூரிக்கு இப்படி குருமா செய்யுங்க.. வழக்கத்தை விட அதிகமா சாப்பிடுவாங்க..

Posted By:

Potato Vellai Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யும் போது, பெரும்பாலும் உருளைக்கிழங்கு தான் சைடு டிஷ்ஷாக இருக்கும்? அதுவும் எப்போதும் ஒரே பக்குவத்தில் தான் உருளைக்கிழங்கை செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை உருளைக்கிழங்கை செய்வதாக இருந்தால், அதைக் கொண்டு வெள்ளை குருமா செய்யுங்கள்.

இந்த உருளைக்கிழங்கு வெள்ளை குருமா பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இந்த குருமாவை செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Potato Vellai Kurma How To Make a Potato White Kurma Recipe

உங்களுக்கு உருளைக்கிழங்கு வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 3
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 1 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* உருளைக்கிழங்கு - 2 (சற்று பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் உருளைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் உருளைக்கிழங்குகளை சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு வெள்ளை குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 5, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion