புதினாவும், பன்னீரும் இருக்கா? அப்ப சப்பாத்திக்கு இந்த மாதிரி கிரேவி செய்யுங்க..

Posted By:

Mint Paneer Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் புதினா உள்ளதா? அப்படியானால் இந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் பன்னீர் கிரேவி செய்யலாம்.

இந்த புதினா பன்னீர் கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, நாண், பூரி போன்றவற்றுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இதற்கு தக்காளி தேவையில்லை. மேலும் இது வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Mint Paneer Gravy Recipe

உங்களுக்கு புதினா பன்னீர் கிரேவி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* புதினா - 1 கப்
* தயிர் - 1/4 கப்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 1
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 1

வதக்கி அரைப்பதற்கு...

* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 4
* முந்திரி - 20

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புதினா இலைகளைப் போட்டு ஈரப்பதம் போகும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, கையால் நசுக்கி பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பன்னீர் துண்டுகளை சுடுநீரில் போட்டு தனியாக ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முந்திரியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். ஆனால் வெங்காயம் மற்றும் முந்திரி கருப்பாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கிரேவியின் நிறமும், சுவையும் மாறிவிடும்.
* வதக்கிய வெங்காயம் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெங்காயம் வதக்கிய அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு பொடித்த புதினா இலைகளை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து, 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். முக்கியமாக மசாலா அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* மசாலா நன்கு வெந்ததும், அதில் சுடுநீரில் ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எடுத்து சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 கப் நீரை ஊற்றி கிளறி, 3-4 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான புதினா பன்னீர் தயார்.

குறிப்பு:

* உங்கள் வீட்டில் முந்திரி இல்லாவிட்டால் பாதாமை கூட பயன்படுத்தலாம்.
* கிரேவியின் சுவையை அதிகரிக்க விரும்பினால், இறுதியில் 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம்மை சேர்க்கலாம்.

Image Courtesy: rakskitchen

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 28, 2023, 16:52 [IST]
Desktop Bottom Promotion