ஒருடைம் மங்களூர் ஸ்டைலில் இறால் மசாலா செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு செமயா இருக்கும்...

Posted By:

Mangalore Prawn Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இறால் என்றால் பிடிக்குமா? அடிக்கடி உங்கள் வீட்டில் இறால் செய்வீர்களா? அதுவும் எப்போதும் இறாலை ஒரே ஸ்டைலில் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இறால் வாங்கினால், அதைக் கொண்டு மங்களூர் ஸ்டைலில் இறால் மசாலாவை செய்யுங்கள்.

இந்த இறால் மசாலா சப்பாத்தி, தோசை, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது ஸ்பெஷலாக ஒரு மசாலாவை அரைத்து சேர்ப்பதால், இதன் சுவை லேற லெவலில் இருக்கும்.

Mangalore Prawn Masala How To Make a Mangalore Prawn Masala Recipe

உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் இறால் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஸ்டைல் இறால் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* ஓரளவு பெரிய இறால் - 600 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* முந்திரி - 7-8 (வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய இறாலுடன் மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி விதைகள், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வறுத்த மசாலா பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஊற வைத்த முந்திரியை நீருடன் சேர்த்து, அதோடு பூண்டு, புளி மற்றும் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் உள்ள இறாலை மட்டும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் உள்ள இறால் வெளியிட்ட நீரை சற்று சுண்ட வைத்து, பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக நன்கு மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் இறாலை சேர்த்து கிளறி, மீண்டும் மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மங்களூர் இறால் மசாலா தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 18, 2024, 13:38 [IST]
Desktop Bottom Promotion