சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்... மதுரை பட்டர் பீன்ஸ் குருமா

Posted By:

Madurai Butter Beans Kurma: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பட்டர் பீன்ஸ் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு மதுரை பட்டர் பீன்ஸ் குருமாவை செய்யுங்கள்.

இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Madurai Butter Beans Kurma Recipe In Tamil

உங்களுக்கு மதுரை பட்டர் பீன்ஸ் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை பட்டர் பீன்ஸ் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பட்டர் பீன்ஸ் - 2 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்

பிற பொருட்கள்:

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1/2
* கொத்தமல்லி - சிறிது

தக்காளி மசாலாவிற்கு...

* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 8 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்

தேங்காய் மசாலாவிற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 12
* கசகசா - 1 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 சிறிய துண்டு
* தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

* முதலில் பட்டர் பீன்ஸை குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் பீன்ஸ் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* சின்ன வெங்காயம் பொன்னிறமானதும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* அதே சமயம் மிக்சர் ஜாரில், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த தக்காளியை வதங்கி கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து கிளறி, 3-4 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள பீன்ஸை நீருடன் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து கலந்து, குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், முந்திரி, கசகசா, கிராம்பு, பட்டை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த தேங்காய் விழுதை குருமாவுடன் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக சர்க்கரையை சேர்த்து, பாதி எலுமிச்சையைப் பிழிந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மதுரை பட்டர் பீன்ஸ் குருமா தயார்.

Image Couresty: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Friday, July 21, 2023, 14:38 [IST]
Desktop Bottom Promotion