இட்லி, தோசைக்கு இந்த சட்னியை ஒருவாட்டி செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..

Posted By:

Spicy Kalavai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? தினமும் அந்த இட்லி, தோசைக்கு சைடு டிஷ் முடிவு செய்வதே ஒரு பெரிய வேலையாக இருக்குமா? உங்களின் வேலையை சுலபமாக்க இன்று ஒரு அற்புதமான சட்னியை பற்றி தான் கொடுத்துள்ளோம். இந்த சட்னியின் பெயர் கலவை சட்னி.

இந்த கலவை சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த சட்னியை ஒருமுறை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் இந்த சட்னியை அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

Kalavai Chutney How To Make a Spicy Kalavai Chutney Recipe

உங்களுக்கு கலவை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கலவை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 3 பல்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 6
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 20 இலைகள்
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி, கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பருப்புகள் மற்றும் பிற பொருட்களை சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்து, அதில் சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கலவை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 2, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion