இட்லிக்கு ஏற்ற செட்டிநாடு கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Chettinad Kaara Chutney Recipe In Tamil: காலை வேளையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு எப்போதும் சட்னி, சாம்பாரைத் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா?

பொதுவாக கார சட்னியை பலவாறு செய்வார்கள். அதில் செட்டிநாடு கார சட்னி வித்தியாசமான சுவையில், மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த கார சட்னி நன்கு காரமாக இருக்கும். இப்படியொரு கார சட்னியை இட்லிக்கு செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி இந்த ஸ்டைலில் கார சட்னியை செய்யுமாறும் கேட்பார்கள்.

Chettinad Kaara Chutney How To Make Chettinad Kara Chutney Recipe

உங்களுக்கு செட்டிநாடு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 3 (நறுக்கியது)
* வரமிளகாய் - 15
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 15-20 பல்
* கறிவேப்பிலை - தேவையான அளவு
* கொத்தமல்லி - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லியைத் தூவி வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, 3 வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, February 26, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion