அரைக்கீரை வாங்குனா.. இப்படி கடைஞ்சு கொடுங்க.. கீரை பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Araikeerai Kadaiyal Recipe In Tamil: கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சிறந்த வழி கீரையை உணவில் அதிகம் சேர்ப்பது தான். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரையை சாப்பிடமாட்டார்களா? எந்த கீரையை செய்தாலும் சாப்பிட மறுப்பார்களா?

அப்படிப்பட்டவர்களை கீரையை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அரைக்கீரையை வாங்கி அதை கடைந்து கொடுங்கள். அதுவும் இந்த பக்குவத்தில் கீரையை கடையும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த பக்குவத்தில் அரைக்கீரையை மட்டுமின்றி, எந்த கீரையையும் செய்யலாம்.

Araikeerai Kadaiyal How To Make a Araikeerai Kadaiyal Recipe

உங்களுக்கு அரைக்கீரை கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைக்கீரை கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 10 பல்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைக்கீரை - 1 கட்டு
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்ழுன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ஒரு வாணலியில் ஊற வைத்த பாசிப்பருப்பை நீருடன் ஊற்றி, அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 10-15 நிமிடம் மூடி வைத்து பருப்பை வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் சுத்தம் செய்து வைத்துள்ள அரைக்கீரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, 5 நிமிடம் கீரையை திறந்து வைத்து வேக வைக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்கி ஓரளவு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அந்த கீரையை மத்து கொண்டு கடைந்தோ அல்லது ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கீரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கடைந்து வைத்துள்ள கீரையுடன் சேர்த்து கிளறினால், சுவையான அரைக்கீரை கடையல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, April 28, 2025, 15:56 [IST]
Desktop Bottom Promotion