ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு - 10 நிமிஷத்துல எப்படி செய்றது-ன்னு பாருங்க...

Posted By:

Andhra Style Tomato Pappu Recipe In Tamil: மதிய வேளையில் டக்கென்று சமையலை முடிக்க வேண்டுமா? அதுவும் வாய்க்கு ருசியாக சாதத்துக்கு ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்புவை செய்யுங்கள்.

இந்த தக்காளி பப்பு சூடான சாதத்துடன், நெய் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த தக்காளி பப்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த தக்காளி பப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Andhra Style Tomato Pappu How To Make a Andhra Special Tomato Pappu Recipe

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* பூண்டு - 4 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்பு இடி கல்லில் பூண்டு, சீரம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் புளியைக் கரைத்து ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு, சீரகத்தை சேர்த்து கிளறி, பூண்டின் நிறம் மாறத் தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, February 7, 2025, 14:10 [IST]
Desktop Bottom Promotion