காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!

Posted By:

Karadaiyan Nombu Uppu Adai Recipe in Tamil: காரடையான் நோன்பு தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும், கணவரின் உயிருக்காக எமதர்மனிடம் போராடி வெற்றி பெற்ற சாவித்திரியின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களின் கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதமிருந்து பூஜை செய்து மஞ்சள் சரடை கழுத்தில் கட்டிக் கொள்கிறார்கள். பூஜை என்றால் அதில் பிரசாதம் இல்லாமலா?

காரடையான் நோன்பு விரதத்தில் முக்கிய பிரசாதமாக இருப்பது என்பது கரடை என்று அழைக்கப்படும் அடை ஆகும். இது உப்பு அடை மற்றும் இனிப்பு அடை இரண்டு வகைகளில் செய்யலாம். இங்கே நாம் பார்க்கப்போவது காரடையான் நோன்பு உப்பு அடையின் ரெசிபியைதான். இந்த உப்பு அடையில் சேர்க்கப்படும் பிரதான பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த பிரசாதத்தை வைத்து இந்த நாளில் வழிபடுவது நினைத்த பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

Karadaiyan Nombu Uppu Adai Recipe How to Make Karadaiyan Nombu Uppu Adai

உங்களுக்கு காரடையான் நோன்பு உப்பு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உப்பு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அரிசி மாவு - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - ¼ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- தேங்காய் - 3 ஸ்பூன்
- காராமணி - அரை கப்
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- காராமணியை நன்றாகக் கழுவி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். அதை ஒரு பிரஷர் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

- தீயைக் குறைத்து, மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

- பின்னர் அடுப்பை அணைத்து அழுத்தம் தானாக வெளியேறும் வரை காத்திருக்கவும். பின் பிரஷர் குக்கரைத் திறந்து, அதிலுள்ள நீரை வடிகட்டிவிடவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு சேர்த்து, அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.

- பின்னர் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறவும்.

- அதன்பின் தண்ணீர், காராமணி, தேங்காய் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, அனைத்தையும் கொதிக்கவிடவும்.

- தீயைக் குறைத்து, அதில் அரிசி மாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரு கெட்டியான மாவுப் பதத்திற்கு வரும் வரை கட்டி விழாமல் இருக்க தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

- அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, நன்கு ஆறவிடவும். மாவைச் சிறு உருண்டைகளாகப் பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அதன் நடுவில் ஒரு துளையிடவும்.

- பின்னர் ​​எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் இந்த அடைகளை வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.

- வெந்ததும் வெளியே எடுத்து, இட்லித் தட்டிலிருந்து எடுப்பதற்கு முன் சிறிது நேரம் ஆறவிடவும்.

- அவ்வளவுதான் சூப்பரான காரடையான் நோன்பு அடை தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion