For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்திசாலி சீடன் சுத்தமான உப்பு வாங்கி வந்த கதை ! - அருமையான பரமார்த்த குரு கதைகள்!!

பரமார்த்த குரு மற்றும் அவர்களில் ஐந்து சீடர்களின் நகைச்சுவை ததும்பும் கதையான புத்திசாலி சீடன் சுத்தமான உப்பு வாங்கி வந்த கதையைத்தான் நாம் இப்போ பாக்கப் போறோம்.

By Gnaana
|

இத்தாலியில் பிறந்து, கிறித்துவமதம் பரப்ப இந்தியா வந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் பெயர்பெற்ற இவர், இந்தியா வந்து தமிழ் மொழியில் தேர்ச்சிபெற்று, வீரமாமுனிவர் என்ற பெயரில் தமிழில் நிறைய உரைநடைகளை கிறித்துவ மதபோதனைகள் கொண்ட நூல்களை வெளியிட்டார். இவரின் "தேம்பாவணி" எனும் காப்பியம் புகழ்மிக்கது.

இவர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில், திருக்குறள்,தேவாரம்,திருப்புகழ் மற்றும் ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை இலத்தீன் மற்றும் பிற மொழிகளில் மொழி மாற்றம் செய்தார். அந்தசமயத்தில் ஐரோப்பியதேசத்தில் பிரபலமாக இருந்த நகைச்சுவைக்கதைகளைத் தழுவி, தமிழ் கலாச்சாரத்தன்மையில் இவர் எழுதிய பரமார்த்தகுரு கதைகள், அவற்றின் நகைச்சுவைத் தன்மையால் புகழ்பெற்று பல இந்தியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழில் முதலில் வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் ஒரு வெகுளி குருவும் அவனுடைய ஐந்து சீடர்களான மட்டி, மடையன், பேதை, மிலேச்சன் மற்றும் மூடன் செய்யும் செயல்களால் பெரும் அனுபவங்களையே, பரமார்த்தகுரு கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறது. சில கதைகளைக் காண்போமா!

Paramartha Guru and his Five disciples- Funny stories!

புத்திசாலி சீடன் "சுத்தமான உப்பு" வாங்கிவந்த கதை!!

ஒரு கிராமத்தில் சிறுஆசிரமம் அமைத்து முட்டாளான பரமார்த்தர் அடிமுட்டாள்களான தனது 5 சிஷ்யர்களுடன் இருந்தபோது, அவர்கள் திருத்தல யாத்திரை செல்ல ஆவல்கொண்டு, வழியில் சாப்பிட கட்டுசாதம் செய்து எடுத்துக்கொள்ள எண்ணி, பரமார்த்தகுரு ஒருசீடனை அழைத்து, சமையலுக்கு சுத்தமான உப்பை வாங்கிவா என அனுப்ப, கடையில் உப்பை வாங்கிய சீடன் " உப்பு சுத்தமானதுதானே"? எனக்கேட்க, அவனோ உப்பில் எல்லாம் ஒன்றுதான் எனக்கூறினான்.

சீடன் " என்ன இப்படிக் கூறிவிட்டாய்? என் குருநாதர் சுத்தமான உப்பை மட்டுமே வாங்கிவரச் சொல்லியிருக்கிறார் " எனச்சத்தமிட்டான்.

கடைக்காரர் இவர்களின் இலட்சணத்தை உணர்ந்துகொண்டு " ஐயா, மன்னித்துவிடுங்கள், உங்கள் குரு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், நீங்கள் உப்பை சமைக்குமுன் நன்றாக தண்ணீர்விட்டு அலசி சுத்தப்படுத்தி பயன்படுத்துங்கள்" எனக்கூறி அனுப்பிவிட்டார்.

"அப்படி வா வழிக்கு, யாரை எமாற்றப்பார்த்தாய்" என்று கிளம்பி வரும்வழியில், ஒரு ஆற்றைக் கடந்தபோது, உப்பை இந்த ஆற்றில் அலசிச் சென்றால், குருநாதரும் சுத்தமான உப்பா என்று நம்மைக் கேட்டால்.. நன்கு ஆற்றில் அலசி சுத்தப்படுத்தி தான் கொண்டுவந்தேன் என்றால் குரு நம்மைப்பாராட்டுவார் என எண்ணி, உப்பைப் பையுடன் நீரில் நன்கு அமிழ்த்திப்பின் பையைத் தோளில் போட்டுக்கொண்டு, நனைந்த உப்பு கரைவதை உணராமல், ஆசிரமம் சென்றான்.

எங்கே உப்பு என்று குருநாதர் கேட்க, சுத்தமான உப்பு வாங்க லேட்டாகிவிட்டது என்றுகூறி பையை அவரிடம் கொடுத்தான்.

" என்ன வெறும்பை.. உப்பு எங்கே?" இவனும் கடைக்காரன் தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம் என்றதால் வழியில் ஆற்றில் சுத்தம் செய்ததாகக்கூற, முட்டாள் குரு,
"சரியாகத்தான் செய்திருக்கிறான் சீடன்.. ஆனால் உப்பு எங்கேபோனது? என்று சமையலை மறந்து, முட்டாள் சீடன் நீரில் கரைத்த உப்பு நீரோடு சென்றதை அறியாமல் சுத்தமான உப்பு எங்கே போனது? என யோசனையில் ஆழ்ந்தனர். மற்ற சீடர்களும் யோசிக்க ஆரம்பித்தனர், இப்போது தெரிகிறதா, இவர்களின் முட்டாள்தனம்.

ஐந்து சீடர்களின் அற்புதத் தயாரிப்பு "தொப்பை கரைச்சான் லேகியம்"!!

இப்படித்தான் ஒருமுறை, திடீரென பரமார்த்த குருவின் தொப்பை பெரிதாகிப்போனது, உட்கார நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால் கவலையடைந்த ஒருசீடன், "குருவே, உங்கள் தொப்பை தினமும் வளர்வது கவலையளிக்கிறது" என்று கூற, மற்றொரு சீடன் " குருவே! உங்களுக்குக் குழந்தை பிறக்கப்போவது போல வயிறு பெரிதாகிறது " எனக்கூற, இன்னொருவன் " உங்கள் வயிறு ஒருநாள் வெடித்துவிடப்போகிறது" என்றான்.

குரு பயந்து" என்ன செய்யலாம்?" எனக்கேட்க," வைத்தியரிடம் சென்றால்.. சரிசெய்யலாம்" என்றான் ஒருவன். வேறொருவன் " வேண்டாம், நம்மிடம் உள்ள ஓலைச்சுவடிகளில், "தொப்பைக் கரிச்சான் லேகியம்" சாப்பிட்டால் தொப்பை கரைந்துவிடும் என இருக்கு, தேவையான மூலிகைகளை நாங்கள் காட்டில் பறித்து வருகிறோம் என்றனர். குரு சீடர்களின் புத்திசாலித்தனத்தை வியந்து, சீக்கிரம் கொண்டுவாருங்கள், நாம் அதை மற்றவர்களுக்கும் விற்று நிறைய சம்பாதிக்கலாம் எனக்கூறினார்.

சீடர்கள் காட்டில் தொப்பை கரிச்சான் மூலிகை எது எனத்தெரியாமல் விழித்தபடி நிற்கும் வேளையில் ஒட்டிய வயிற்றுடன் முனிவர் ஒருவர் தவம் செய்வதுகண்டு, முனிவரே, தொப்பை கரிச்சான் செடி எங்கே இருக்கிறது என்று கேட்டு அவர் தவம் கலைக்க, கோபங்கொண்ட முனிவர் அவர்களை குழப்ப எண்ணி, எது நாறுகிறதோ அதுவே நீ தேடுவது" என்றார். இதை நம்பிய முட்டாள்சீடர்கள், கண்களில்கண்ட எல்லாச்செடி இலைகளையும் பறித்தனர்.

அவற்றைக் கண்ட குரு மகிழ்ந்து என் தொப்பை சீக்கிரம் குறைந்து விடும் என்று அவர்கள் அரைத்துக்காய்ச்சிய கெட்டநாற்றம் வீசிய லேகியத்தை மூக்கைப்பிடித்துகொண்டே பல உருண்டைகள் உண்டார்.

மன்னன் முதல் மக்கள் வரை தொப்பை கரைக்க பரமார்த்தர் லேகியம் உண்பது அறிந்து அவர்களும் தொப்பை கரைக்க மூக்கைப் பிடித்துக்கொண்டே, உண்டனர்.

சிறிதுநேரத்தில் எல்லோருக்கும் கடும் வயிற்றுவலியுடன், கண்டவற்றை உண்டதால் வயிற்றுப்போக்கும் உண்டானது. கடுங்கோபம் கொண்ட மன்னர், பரமார்த்தரை பட்டினிச் சிறையில் அடைத்தார்.

தண்டனை முடிந்து பசி சோர்வால், வயிறு காய்ந்து தொப்பை இல்லாமல் தள்ளாடி வர," குருவே! எங்கள் லேகியம்தான் உங்கள் தொப்பையைக் கரைத்துவிட்டது" எனச்சீடர்கள் பெருமைகொள்ள," தண்ணீர் கூட இல்லாத பட்டினி சிறையால் இப்படி ஆயிற்றடா முட்டாள்களா" என்று மயங்கி விழுந்தார் முட்டாள்களின் தலைவர் பரமார்த்த குரு.

உட்கார்ந்து சாப்பிட எண்ணி சோம்பேறி சீடர்கள் போட்ட திருட்டு !

உழைக்காமல் திருடி சம்பாதிக்க துணிச்சல் இன்றி, குரங்கைப் பழக்கி திருட்டுத் தொழில் செய்ய முடிவெடுத்தனர் முட்டாள் குருவும் அடிமுட்டாள் சீடர்களும்.

ஏதேச்சையாக காட்டில் கண்ட குரங்கைப்பிடித்து ஆசிரமத்தில் வைத்து "குருநாதர் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார்.நமக்கு ஒரு தடவைகூட தந்ததில்லை.. குரங்கே!எங்களுக்கு நல்ல விலைஉயர்ந்த சுருட்டை கொண்டுவா " என அனுப்ப, குரங்கு பட்டாசுக்கடையில் கண்ட பட்டாசுகளை சுருட்டென தவறாக எண்ணிக் கொண்டுவந்துவிட்டது.

ஆனந்தம்கொண்ட அடிமுட்டாள்சீடர்கள் எல்லாம், ஆஹா! நம் குருநாதர் பிடிப்பதைவிட விலை உயர்ந்த சுருட்டுகள்.. அதுதான் கலர் கலராக இருக்கிறது, அட பத்த வைக்க திரி கூட இருக்கிறதே, எனப் பத்த வைக்க, பட்டாசு வெடித்தது.

உதடுகள் கிழிந்து, "ஆஆ ஆஞ்சநேயா" என வலியில் கதற, குரு ஒடிவந்து, எனக்குத் தெரியாமல் இனி "திருட்டுத்தனம்" கூடாது என சீடர்களுக்கு வார்னிங் செய்தார்.

தங்கள் குருநாதர் கிழிந்த வேட்டி உடுத்தி இருப்பது கண்டு, "குருவே! உங்களுக்கு நல்ல பட்டுத்துணிகள் எடுத்துவரச்சொல்லுங்கள்" என்றனர்.

அவ்வாறே, குரங்கும் அரண்மனையில் இருந்த மன்னனின் ஆடைகள், கிரீடம் யாவற்றையும் கொண்டுவந்துவிட, அதைக் கண்ட முட்டாள் சீடர்கள் எல்லாம் வாய்பிளந்து ஆளுக்கொரு ஆடைகள் உடுத்திக்கொள்ள, உற்சாகமாக, கிரீடம் சூடிய முட்டாள் குருவுடன் ஊர்வலமாக ஊருக்குள் சென்றனர்.

அடுத்த நொடியே, அரசனிடம் திருடியதற்காக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உட்கார்ந்து சாப்பிட ஒரு வழியும் இல்லையா... என்ன நாடு இது? கொடுமை சார்" என முட்டாள்குருவுடன் புலம்பியபடியே இருந்தனர் அடிமுட்டாள் சீடர்கள்.

Read more about: life வாழ்க்கை
English summary

Paramartha Guru and his Five disciples- Funny stories!

Paramartha Guru and his Five disciples- Funny stories!
Desktop Bottom Promotion