Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா?

Tamil Nadu Elections 2026: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நான்கு முனைப்போட்டியாக இருக்கப்போகிறது.

தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். கிட்டதட்ட 8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் கடந்த மக்களவை தேர்தல் புள்ளி விவரங்களின் படி 6.41 கோடி பேருக்கு ஓட்டுரிமை இருந்தது, ஆனால் தற்போது சிறப்பு வாக்காளர் சீர்திருத்தத்திற்கு பின்னர் கிட்டதட்ட 97 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை நீக்கப்பட்டுள்ளது. இந்த 97 லட்சம் ஓட்டுகள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தவை. இந்த நீக்கப்பட்ட வாக்குகள் தமிழ்நாட்டின் பல தொகுதிகளை புரட்டிப்போட்டுள்ளது.

Tamil Nadu Elections 2026 Top 5 Tamil Nadu Constituencies With the Highest Voters

சொல்லப்போனால் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதிகள் மற்றும் குறைவான வாக்காளர் கொண்ட தொகுதிகளே மாறிவிட்டது. இது வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்

தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2026-ஆம் ஆண்டிற்கான சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் இறுதி பட்டியலின் படி தமிழ்நாட்டில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர்; இவர்களில் 28,960,838 பேர் பெண்கள் மற்றும் 27,738,925 பேர் ஆண்கள் ஆவர். இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் (SIR) பிறகு, மாநிலம் முழுவதும் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது. இது முந்தைய எண்ணிக்கையான 6.41 கோடியிலிருந்து மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இருப்பினும், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக, இணையம் வாயிலாகவும், நேரடியாவும் மொத்தம் 34,75,717 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2025 டிசம்பர் 19 முதல் ஜனவரி 30 வரையிலான, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பதிவு செய்வதற்கான காலக்கட்டத்தில், தகுதியுள்ள 27.53 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்; அதேவேளையில், தகுதியற்ற 4.23 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. தற்போது சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியலால் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகள் மாறிவிட்டன.

அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகள்

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி, 5,36,991 வாக்காளர்களுடன் அதிகபட்சப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்டுள்ள விரைவான நகர வளர்ச்சி மற்றும் குடியிருப்பு விரிவாக்கமே, இவ்வளவு பெரிய வாக்காளர் எண்ணிக்கைக்குக் காரணமாக அமைந்துள்ளது. இதில் 2,62,621 ஆண்கள், 2,74,254 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 116 பேர் அடங்குவர்.

- இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாதவரம் தொகுதி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 4,86,536 வாக்காளர்கள் உள்ளனர்.

- மூன்றாவது இடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆவடி தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் 4,60,408 வாக்காளர்கள் தற்போது இருக்கிறார்கள்.

- நான்காவது இடத்திலும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரவாயல் தொகுதி உள்ளது. தற்போது மதுரவாயலில் 4,41,669 வாக்காளர்கள் உள்ளார்கள்.

- ஐந்தாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் 3,68,652 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதி

சென்னையில் உள்ள துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர். SIR-க்குப் பிறகு தொகுதியில் 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 58,221, பெண் வாக்காளர்கள்,58,620 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 55 உள்ளனர்.

Story first published: Wednesday, March 18, 2026, 18:54 [IST]
Desktop Bottom Promotion