வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க..

Summer Health Tips In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் சிறிது நேரம் வெளியே சென்றாலே சூரியன் ஸ்ட்ரா போட்டு உடலில் இருந்து ஆற்றலையும், நீரையும் உறிஞ்சி, உடல் வறண்டு போன உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் வெயில் காலத்தில் அளவுக்கு அதிகமாக வியர்ப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, உடல் சூடு பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நீரை அதிகம் அருந்த வேண்டும். ஆனால் எவ்வளவு தான் வெறும் நீரை குடிக்க முடியும். எனவே வெறும் நீரை குடிப்பதற்கு பதிலாக, இளநீர், மோர், பானகம் போன்றவை மட்டுமின்றி, ஒருசில விதைகளை நீரில் ஊற வைத்து, அவற்றை எடுக்கலாம்.

Summer Health Tips Doctor Shares 3 Best Seeds-Infused Water To Beat The Summer Heat

இதுகுறித்து டாக்டர் ஜனனி சுப்புராஜ் அவர்கள் கொளுத்தும் கோடை வெயிலில் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், குடலை இதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் உதவும் 3 சீட்ஸ் இன்ப்யூசிங் பானங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த விதைகளை ஊற வைத்த பானங்களை கோடையில் வெறும் தண்ணீருக்கு பதிலாக குடித்து வந்தால் உடல் சூடும் குறையும், குடலியக்கமும் சிறப்பாக இருக்கும். அந்த பானங்கள் பின்வருமாறு:

1. பாதாம் பிசின்

"இந்த பாதாம் பிசின் உடலை குளிர்விக்கும் பண்பைக் கொண்டது. இதை நீரில் ஊற வைத்து உட்கொண்டு வந்தால், அது உடல் சூட்டை சிறப்பாக குறைக்கும். மேலும் பொலிவான சருமத்தைப் பெற மற்றும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால், இந்த பாதாம் பிசினை தேங்காய் பால் அல்லது ஃபுல் க்ரீம் பாலுடன் கலந்து குடித்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்" என்று கூறினார். அதோடு இந்த பாதாம் பிசின் செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல் ஆகியவற்றிற்கும் தீர்வளிக்கிறது.

Summer Health Tips Doctor Shares 3 Best Seeds-Infused Water To Beat The Summer Heat

2. சியா விதை நீர்

"நீங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவரானால், இந்த சியா விதை நீரை உட்கொள்வது நல்லது. ஏனெனில் இந்த விதைகளில் புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. எனவே இதை எடுக்கும் போது வயிறு நிரம்பி பசியும் கட்டுப்படும் மற்றும் கண்ட உணவுகளின் மீதான ஆவலும் கட்டுப்படும். மேலும் இந்த விதைகளை தினமும் 2 டேபிள் ஸ்பூனுக்கு மேல் எடுக்காதீர்கள்" என்று டாக்டர் கூறினார். அதற்கு இந்த சியா விதைகளை நீரில் ஊற வைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து, தேன் கலந்து குடித்து வந்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

3. பேசில் விதைகள்/சப்ஜா விதைகள்

"நீங்கள் ஒரு சோம்பேறியான நபர் என்றால் சட்டென்று ஒரு விதையை ஊற வைத்து, உடனே உடலுக்கு ஆற்றல் கிடைக்க வேண்டுமென்று நினைத்தால், இந்த சப்ஜா விதைகள் உங்களுக்கானது. இந்த விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இது மலச்சிக்கலைத் தடுக்க பெரிதும் உதவக்கூடியது. இந்த விதைகளை நாள் முழுவதும் எவ்வளவு வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்" என்று டாக்டர் கூறினார். இந்த சப்ஜா விதைகளை நீரில் ஊற வைக்கும் போது அது ஜெல்லி போன்ற தன்மையை பெறுவதால், சர்பத், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ள அருமையாக இருக்கும். இந்த விதைகளானது உடல் சூட்டை தணிப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும்.

எனவே நண்பர்களே! உங்களுக்கு கோடையில் வெறும் நீரை குடித்து போரடித்திருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள விதைகளை நீரில் ஊற வைத்து உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலில் நீர்ச்சத்தும் அதிகரிக்கும், உடல் சூடும் குறையும் மற்றும் கோடையில் சந்திக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தடுக்கப்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, April 21, 2026, 12:33 [IST]
Desktop Bottom Promotion