பாலைவனத்தில் கூட வளரும் இந்த அதிசய மரத்தின் மருத்துவ நன்மைகள்

பாலையிலும் வளரும் தன்மை கொண்ட எழிலைப் பாலை பற்றிய கட்டுரை

By Gnaana

பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதியதை, தங்கள் நோட்டுக்களில், எழுதிக்கொள்வது, பெரும்பாலான மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கசப்பான இடும் கட்டளையாக, இருந்திருக்கும், இதுவே, சமயங்களில் கல்லூரிகள் வரை தொடரும்போது, மாணவர்கள், சலித்துக்கொள்வர். இன்னும் நம்மை ஆசிரியர்கள், எழுதச் சொல்கிறார்களே என்று.

ஆயினும், எழுத எழுதத் தான், பாடங்கள் புரியும். மேலும், ஒவ்வொரு வருடமும் வரும் புதிய மாணவர்களுக்காக, அந்த ஆசிரியர் இன்னும் கரும் பலகையில் எழுதிக்கொண்டிருக்கிறாரே, ஏன், அவர் எழுத வேண்டும்? புத்தகத்தைப் பார்த்து எழுதிக்கொள்ளுங்கள், என்று சொல்லிவிடலாமே!

அவர் எழுதுவதைப் பார்த்து, மாணவர்கள், தங்கள் நோட்டுகளில் எழுதிக் கொள்ளும்போதுதான், அது மனதில் விரைவாகப் பதிகிறது.

இங்கே, பாடம் நடத்துவது, நமது கட்டுரையின் நோக்கம் இல்லை, பாடம் நடத்த பேருதவி செய்யும் கரும்பலகையே, நமது பொருள். பள்ளி முதல் கல்லூரி வரை, எல்லா இடங்களிலும், ஆசிரியர் மாணவர் இடையே, அறிவுப் பாலமாக இருக்கும், கரும்பலகை எந்த மரத்தில் இருந்து செய்யப்படுகிறது, என்று நாம் அறிவோமா?
அந்த மரத்தை அறிமுகப்படுத்தத் தான், பள்ளிப்பருவ, பழைய நினைவு அலைகள்!.

அடர்ந்த பசுமை மாறாத காடுகளில், வாழும் தனிச்சிறப்புள்ள மரம், ஏகாளி மரம். இதற்கு ஏழிலைக்கள்ளி மற்றும் பேய் மரம் என்றும் பெயர் உண்டு. பொதுவாக, ஏழிலைப் பாலை என்று அழைக்கப்படும் இந்த மரமே, பள்ளி வகுப்புகளில், உள்ள கரும்பலகையை உருவாக்கி, அறிவாற்றல் மிக்க வருங்காலத் தலைமுறைகளை வெளிக் கொண்டு வருவதில், பெரும் பங்கு வகிக்கிறது.

ஒரே காம்பில் ஏழு இலைகளைக் கொண்டு காணப்படுவதால், ஏழிலைப் பாலை மரம் என்று அழைக்கப்படும் இந்த மரம், நடுத்தர உயரங்களில் வளரும். சற்றே பால் சுரக்கும் தண்டுகளையும், பசுமை கலந்த மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட இந்த மரம், தமிழகத்தில் உள்ள மலைத் தொடர்களில் அதிகம் காணப்படுகிறது. தற்காலம் நகரங்களில் அதிக இடங்களில் வளர்க்கப்படுகின்றன. சப்த பர்னா என்று வட மொழியில் அழைக்கப்படும் ஏழிலைப் பாலை மரம், பல ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்கது.

சங்க காலத்தில் நமது முன்னோர்கள் வசிக்கும் நிலப்பரப்பை ஐந்து வகையாகப் பிரித்து வாழ்ந்து வந்தார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலம் என்று.

இந்த ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு வகை வாழ்க்கை முறையும், நெறிகளும் மட்டுமல்ல, அந்த நிலத்திற்கென்று தனி மரம், செடிகள், உணவு, தானியங்கள் என்று அனைத்திலும், நிலப்பகுதிகள் வேறுபட்டு திகழும். அந்த வகையில், கடும் வறட்சியைத் தாங்கி, பாலை நிலத்தில் வளரும் ஒரு மரம் தான், பெயரிலேயே பாலை எனக் கொண்டிருக்கும், ஏழிலைப் பாலை மரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலை எத்தனை வகை :

பாலை எத்தனை வகை :

பாலை மரங்களில் பல வகைகள் இருக்கின்றன, அவை உலக்கைப் பாலை, குடச பாலை, வெப்பாலை, ஏழிலைப் பாலை மற்றும் முசுக்கைப் பாலை. ஒவ்வொன்றும், மருத்துவத் தன்மைகள் மிக்கவை.

பாலை நிலத்தில், பாலை மரங்கள் ஒரே வகையில் வளர்ந்தாலும், இவை பின்னர் மக்கள் வசிப்பிடங்கள் மாறிய பின், அந்தந்த மண்ணின் சூழலில் வளர்ந்து, வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன.

பாலை மரங்கள் ஆன்மீகத்தில் சிறப்பு பெற்ற மரங்களாகும், திருக்கோவில்கள் பலவற்றில், அவை தல மரங்களாகத் திகழ்கின்றன, அந்த வகையில், திருக்கழுகுன்றம் வேதபுரீஸ்வரர் திருக்கோவிலின் தலமரமாக விளங்குகிறது, ஏழிலைப் பாலை மரம்.

பாலை மரத்தின் நன்மைகள் :

பாலை மரத்தின் நன்மைகள் :

மலேரியா ஜுரத்தைப் போக்கும் மருந்து, இதன் பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சிறார்களுக்குத் தேவையான, பென்சில், சிலேட், கரும்பலகை மற்றும் காகிதம், தீப்பெட்டி தயாரிப்பிலும் பயன் தருகிறது ஏழிலைப் பாலை மரம்.

ஏழிலைப் பாலை மரத்தின் இலை, பூ, வேர்ப் பட்டைகள் மற்றும் காய்களில் அதிக அளவிலான பீடா சிடோஸ்டிரால், பிக்ராலினால் போன்ற தாதுக்கள், ஆல்கலாய்டுகள் இருக்கின்றன. இதன் மூலம், வாசனை திரவியங்கள், தைலங்கள் மற்றும் டிஞ்சர் போன்ற பல வகையான, மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.

மூலிகை மருத்துவத்தில், ஏழிலைப் பாலை :

மூலிகை மருத்துவத்தில், ஏழிலைப் பாலை :

தாய்ப்பால் சுரக்க :

ஏழிலைப் பாலை இலைகளை அரைத்துச் சாறெடுத்து, பிரசவித்தத் தாய்மார்களுக்குத் தர, தாய்ப்பால் நன்கு சுரக்கும், உடல் வலி தீரும்.

காயம் ஆற்றும் :

காயம் ஆற்றும் :

ஏழிலைப் பாலை இலைகளை, சிறிது நீரில் இட்டு கொதிக்க வைத்து, நன்கு சுண்டிய பின்னர், ஆற வைத்து, பருகி வர, சருமத்தில் உள்ள காயங்கள், வெடிப்புகள் மற்றும் சரும வியாதிகள் யாவும் விலகி விடும்.

காய்ந்த இலைகளை வாணலியில் இட்டு வறுத்து, தூளாக்கி, தூளை, ஆறாத இரத்தமும் சீழும் வடியும் காயங்களின் மேல் வைத்து வர, காயங்கள் விரைவில் ஆறி விடும்.

வயிற்றுப் போக்கு :

வயிற்றுப் போக்கு :

ஏழிலைப் பாலை மரப்பட்டைகளின் தூள், உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால், வயிற்றில் உள்ள புழுக்களால், நெடு நாட்களாக தீராமல் இருக்கும் வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தி, புழுக்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது, இரத்தம் கலந்து வரும் வயிற்றுப் போக்கையும் சரியாக்கும்.

செரிமானத்திற்கு :

செரிமானத்திற்கு :

மரப்பட்டை தூள், உடல் தளர்ச்சி அடைந்தவர்களின் வயிற்றை வலுவாக்கி, செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை மிக்கது. ஏழிலைப் பாலை மரப்பட்டைத் தூளை, சிறிது எடுத்து, ஒரு தம்ளர் நீரில் இட்டு ஊற வைத்த பின்னர் சிறிது சிறிதாக, இந்த நீரை தினமும் பருகி வர, நாள்பட்ட வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் விலகியபின், உடலில் ஏற்படும் பலகீனத்தைப் போக்கும்.

தலை வலிக்கு :

தலை வலிக்கு :

ஏழிலைப் பாலை வேர்த்தூள், வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும், வாத பாதிப்புகளை சரியாக்கும்.ஏழிலைப் பாலை மரத்தின் பால், காயங்களை ஆற்றும், வாத பாதிப்புகள் உள்ள இடங்களில் தடவி வரலாம். நெற்றியில் தடவி வர, தலைவலியைப் போக்கும்.

 கல்லீரல் நோய்களுக்கு :

கல்லீரல் நோய்களுக்கு :

ஏழிலைப் பாலை மரத்தின் இலைகள், மரப்பட்டை, மலர்கள் இவற்றை நன்கு உலர்த்தி, தூளாக்கி, அதை சிறிது தினமும் நீரில் காய்ச்சி பருகி வர, சுவாச பாதிப்புகள், இதயக் கோளாறுகள், நடுக்கு ஜுரம், மற்றும் செரிமானமின்மை, வயிறு பாதிப்புகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும், கல்லீரல் பாதிப்புகளை விலக்கும்.

அஜீரணம் :

அஜீரணம் :

பாலை மரத்தின் இலைகள், தண்டுகள், மலர்கள் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும், கெப்மாரின் மருந்து, செரிமானமின்மை வியாதியைப் போக்கி, உடல் நலம் காக்கிறது.

மரச்சாமான்கள் செய்ய :

மரச்சாமான்கள் செய்ய :

அரிய மருத்துவ தன்மைகள் கொண்ட பாலை மரங்கள், இதர உபயோகங்களுக்கும் பெரும் பயனாகின்றன. கரும்பலகை மற்றும் சிலேட்டுகளின் சட்டம் மட்டுமன்றி, இந்த மரத்தின் உறுதித் தன்மை காரணமாக, நாற்காலி, மேஜை, மரப் பெட்டிகள், மற்றும் தேயிலை சேகரிப்பு பெட்டிகள் என்று பயன் தரும் மரச் சாமான்கள் தயாரிப்பில், பெரும் பங்கு வகிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, December 1, 2017, 16:40 [IST]
Desktop Bottom Promotion