ஆணவக்கொலைகளுக்கு முடிவு சொல்லும் மழை மாமன் கதை!

ஆணவக்கொலைகளுக்கு எதிராக ஒரு காதல் ஜோடியின் முடிவு.

மழையை ரொம்ப பிடிக்கும் அவனுக்கு, மழைக்கும் அவனைப்பிடிக்கும். ஊரில் உள்ள இரண்டு கால் மிருகங்களுக்கு தெரியாமல் சேமித்த காதல் அது. "ஏட்டி...மழ இங்கன வாடி".... என்று ரகசியமாய் அழைக்கும் போதே மழைக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.

'ஊரான் பாத்துருவான் மாமா....' என்று தலையை சொரிந்து கொண்டும் கட்டியிருக்கும் தாவணியை இழுத்துக்கொண்டும் சிணுங்குவாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளிப்பிள்ளை :

கிளிப்பிள்ளை :

அரைப்பயித்தியமாய் திரிந்தவளை இலவச வேலைக்காரியாகத் தான் நடத்தினர் ஊரார். ஆனால் அவள் பைத்தியமல்ல என்று மழையின் மாமனுக்கு மட்டும் விளங்கியது.

டவுனுக்கு போகும் நேரங்களில் எல்லாம் கை நிறைய நெல்லியை பறித்துக் கொண்டு தாவணியில் அள்ளிக்கொண்டு வருவாள். "சட்டப்பையில வச்சுக்கோமாமா தின்னுட்டே போலாம்.... பட்டணத்துக்கு போனா பெரிய பெரிய வண்டியெல்லாம் பாப்பியா மாமா?".... என்று ஒரே கேள்வியை ஒவ்வொரு முறையும் தவறாமல் கேட்டுவிடுவாள்.

"பெரிய வண்டி பேரு பஸ்ஸுடி" என அழுத்தம் திருத்தமாக அந்த இரண்டு எழுத்தை உச்சரிப்பான்....

குத்துக்காலிட்டு உட்கார்ந்தவள் மண்ணில் கிறுக்கிக் கொண்டே "அதான் மாமா பெரிய வண்டி..ஒரு நாள் என்னைய கூட்டிட்டு போ சரியா?" என்று மண்டையை ஆட்டி பின்னலை இழுத்துக் கொள்வாள்.

Image Courtesy

வெட்டிப்பய :

வெட்டிப்பய :

மாமனிடம் பேசுகிறாள் என்று தெரிந்தாலே மழையின் அம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும்.... வெட்டிப்பயல்ட்ட என்னடீ பேச்சு என்று முறத்தை எடுத்துக் கொண்டு வருவாள்.

முறத்தை கொண்டு வீசினால் யாராக இருந்தாலும் பறந்துவிடுவர் என்ற நினைப்பு அவளுக்கு.

பள்ளிக்கும் செல்லாமல் கூலிக்கும் செல்லாமல் ஊர் சுற்றியவனுக்கு வெட்டிப்பய என்பதைத் தாண்டி அவ்வூரில் வேறு பெயர்கள் இருக்கவில்லை.

ஊரார் வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய கிடைத்த ஒரு வெட்டிப்பயல் அவன்!

Image Courtesy

மழை :

மழை :

காலை ஏழு மணிக்கு தட்டில் காலை உணவு இருக்க வேண்டும். எல்லா குழந்தைகளும் குளித்து முடித்து கையில் புத்தகங்களுடன் உட்கார்ந்திருக்க வேண்டும்.

போரில் வெற்றிப்பெற்ற அரசன் அடிமைகளை நோட்டம் விட்டுச் செல்லும் தொனியில் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு அங்கவஸ்த்திரத்தை தேய்த்துக் கொண்டு நமட்டுச் சிரிப்புடன் ஒவ்வொருவரையும் பார்த்து நகர்வார்.

வாய்த்தவறி எந்த சத்தமும் வந்துவிடக்கூடாது. மிக முக்கியமாக பேசிடக்கூடாது. ஏனென்றால் அது குமாஸ்தாவிற்கு கௌரவக் குறைச்சலாம்.

ஊர் தலைக்கட்டின் குமாஸ்தா என்பதை விட இன்னொரு அடையாளம்

மழையின் அப்பன்!

Image Courtesy

சுண்ணாம்பு வீடு :

சுண்ணாம்பு வீடு :

மழையின் வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்க வந்த வெட்டிப்பயலை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாளியில் கரைத்த சுண்ணாம்பை நார் பிரஷ்ஷைக் கொண்டு தரையில் சொட்டச் சொட்ட எடுத்து சுவற்றில் இலகுவாக வீசுவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது அதைவிட சுண்ணாம்பு கச்சிதமாய் சுவற்றில் படிவதும் புள்ளி வைத்தாற் போல தரையில் சிதறுவதும் அவளுக்கு பிடித்திருந்தது.

சுண்ணாம்பை முக்கி பிரஷை தட்டுவதும், சுவற்றில் அடிப்பதும் தேய்ப்பதும் என ஒவ்வொரு சத்தத்தையும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவனிடம் இருக்கும் ஏதோ ஒன்று தான் இப்படியான அற்புதங்கள் செய்யவைக்கிறதென நினைத்துக் கொண்டாள். ஐந்து நாளில் வீடு முழுவதையும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல பளபள என்று ஆக்கிவிட்டான். மழைக்கு அதிசயமாய் இருந்தது. அதைவிட வெட்டிப்பயலின் கை வண்ணத்தை நினைத்து அவளுக்கு பெருமையாய் இருந்தது.

Image Courtesy

கல்யாணம் கட்டிக்கணும் :

கல்யாணம் கட்டிக்கணும் :

சிகப்பு டவுசரிலும் பனியனிலும் சுண்ணாம்பு படிய கை கால்கள் முகமெல்லாம் வெள்ளை வெள்ளையாய் அப்பியிருக்க வீட்டிற்கு பின்புறம் பீடியை இழுத்துக் கொண்டிருந்த வெட்டிப்பயலுக்கு இன்று கூலி கொடுக்க வேண்டும்.

வீட்டின் கடைக்குட்டிக்கு ஜடை பின்னிக்கொண்டிருந்தாள் மழை. அவனின் சுண்ணாம்பு அடித்த கைப்பக்குவத்தை மனதில் நிறுத்தி தலையில் எண்ணெய் வைத்து படிய தலைவாருவதில் சில சாகசங்களை நிகழ்த்தலாம் என்று எண்ணி வேலையை ஆரம்பித்தவள் எண்ணெயைக் கொட்டி வாங்கி கட்டிக் கொண்டாள்.

கூலியாக இருபது ரூபாயும் பழைய சோறையும் கொடுத்தாள் மழையின் அம்மா. அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு முதுகை காட்டிக்கொண்டு எதிர்ப்பக்கம் பார்த்து உட்கார்ந்த படி சாப்பிட ஆரம்பித்தான். பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மழை மெல்லக் கேட்டாள்

என்னைய கட்டிக்கிறீங்களா?

Image Courtesy

 இரண்டு கொலைகள் :

இரண்டு கொலைகள் :

ஊரே திரண்டிருந்தது. வெட்டிப்பயலும் அவனின் கூட்டாளிகளும் கிணற்றில் இறங்கியிருந்தனர். வயிறு உப்பியிருந்த பயலைத் தொட எல்லாரும் சங்கடப்பட்டு விலகி நிற்கு அவன் தூக்கி தோளில் வைத்துக் கொண்டான். கீழேயிருந்து மேலே தூக்கி வர மேலேயிருந்த கூட்டம் தெரித்து விலகியது. கடன் வாங்கிட்டான் கட்ட முடியாம கிணத்துல விழுந்துட்டான் என்று திரியை கிள்ளிப்போட்டார் ஒருத்தார். கடனாம்... ஊர் பூரா கடன்... கடன் வாங்கி ஓடிப்போக பாத்தான் பிடிச்சதும் குதிச்சுட்டான் என்று உருமாறிக் கொண்டே பரவியது.

பெற்றவள் தலைவிரி கோலமாய் மாரில் அடித்து கத்தி கத்தி அழுது கொண்டிருந்தாள். யாருக்கும் காது கேட்ககூடாது அவளின் மொழி புரியக்கூடாது என்று சாபம் போல! அவள் அருகில் கூட யாருமே செல்லவில்லை. கிணற்றில் இருந்தவனை சுமந்து வந்த வெட்டிப்பயல் மட்டும் கிடத்தப்பட்டிருந்தவனின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டான் பத்தடி தூரம் விலகி கூட்டம் சுற்றியிருந்தது.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒருத்தி வந்து அழுது கொண்டிருந்தவள் முதுகில் விழுந்து சடலத்தின் காலில் விழுந்தாள். அடுத்த நொடி அவள் தலையில் கடப்பாரை விழுந்தது. எழ முயற்சி செய்வதை அறிந்து இன்னொரு அடி.

நீண்ட நேரம் கழித்து ஒவ்வொருதராக விலக கூட்டம் குறைந்தது. நம்ம புள்ளைய எடுங்க காரியம் பண்ணிரலாம் என்று ஒரு குரல் வர, கண்டவன் கால்ல போய் விழுந்தவ எல்லாம் என் மவ இல்ல.... அழுகி புளு வந்து போட்டும் நான் தொடமாட்டேன் தொடவே மாட்டேன் என்று வீரத்துடன் நகர்ந்தார் பெரியவர் ஒருவர்.

Image Courtesy

தப்பெல்லாம் தப்பேயில்லை :

தப்பெல்லாம் தப்பேயில்லை :

எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை அழுது வீங்கிய கண்களுடன் பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் மறைவாக நின்று கொண்டாள். டவுசர் தெரிய லுங்கியை மடக்கி கட்டியிருந்தான் மழையின் மாமன். உச்சி வெயிலில் சட்டையின்றி துண்டை தலைப்பாகையாக கட்டிக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தான்.

அவள் காத்திருக்கவில்லை அடுத்த நொடி அவன் மேல் விழுவது போல் அருகில் சென்றுவிட்டாள்.

"சொல்லு மாமா."...

"கட்டிக்கோ.... "

"அப்போ நீ ?"

"நானும் இருப்பேன் "

"இதுலயே அப்டியே டவுனுக்கு போய்டலாம் வா மாமா... "

" ஏன் நீயும் நானும் சாகணும் அப்பறம் நம்ம பேரச் சொல்லி ஒவ்வொருதரா அடிச்சுட்டு சாகணுமா... "

"அதெல்லாம் சரிவராது மாமா... "

"கிளி!... அவன் பண்றது தப்பில்லன்னா நம்ம பண்றதும் தப்பில்ல. "

மழைக்கு விளங்கியது. எல்லாம் விலகியது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, August 1, 2017, 17:12 [IST]
Desktop Bottom Promotion