பூரி, சப்பாத்தி, தோசை, இட்லி-ன்னு எல்லாத்துக்கும் பொருத்தமான குருமா - எப்படி செய்றது-ன்னு பாருங்க...

Posted By:

Veg kurma Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட முடியாமல் பலரும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா? வாய்க்கு ருசியாக என்ன சமைத்து சாப்பிடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

அப்படியானால் வெஜ் குருமாவை செய்யுங்கள். இந்த வெஜ் குருமா இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்துடனும் சாப்பிட ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Veg Kurma How To Make a Simple And Tasty Vegetable Kurma Recipe

உங்களுக்கு வெஜ் குருமாவை எப்படி ஈஸியாக செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பட்டாணி - 1/2 கப் (நீரில் 6 மணிநேரம் ஊற வைத்தது)
* கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

அரைப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறு துண்டு
* பூண்டு - 7 பல்
* பச்சை மிளகாய் - 4
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

குருமாவிற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு குக்கரில் ஊற வைத்துள்ள பச்சை பட்டாணியை கழுவி சேர்த்து, அத்துடன் கேரட் மற்றும் உருளைக்கிழங்கையும் சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு தூவி, காய்கறிகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதன் பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, புதினா, கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து ஒருமுறை நன்கு வதக்க வேண்டும்.
* பின் வேக வைத்துள்ள காய்கறிகளை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெஜ் குருமா தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Sunday, October 6, 2024, 7:51 [IST]
Desktop Bottom Promotion