வத்தக்குழம்பு செய்யும் போது இந்த ஒரு பொடியை சேத்துக்கோங்க.. ருசி இன்னும் வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Vatha Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வத்தக்குழம்பு பிடிக்குமா? ஆனால் நீங்கள் செய்யும் வத்தக்குழம்பு அவ்வளவு ருசியாக இருக்காதா? அப்படியானால் ஒருமுறை வத்தக்குழம்பை இந்த பக்குவத்தில் செய்யுங்கள்.

இப்படி குழம்பு செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். ஏனெனில் இதில் ஸ்பெஷலான ஒரு பொடி தயாரித்து சேர்க்கப்படுகிறது. முக்கியமாக இப்படி குழம்பை செய்தால், 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதுவும் மழை நேரத்தில் இந்த குழம்பு செய்து சாப்பிடும் போது, ருசி இன்னும் வேற லெவலில் இருக்கும்.

Vatha Kuzhambu How To Make a Vatha Kuzhambu Recipe

உங்களுக்கு வத்தக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வத்தக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மணத்தக்காளி வத்தல் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சுண்டக்காய் வத்தல் - 2 டேபிள் ஸ்பூன்
* மாங்காய் வத்தல் - 2 துண்டு
* கொத்தவரங்காய் வத்தல் - சிறிது
* புளி - 1 எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து பொடிப்பதற்கு...

* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 10
* வெள்ளை எள்ளு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வடகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 1/4 கப்
* கெட்டி தேங்காய் பால் - 1/2 கப்
* வெல்லம் - சிறிய துண்டு

வத்தலை வறுப்பதற்கு..

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* சுண்டக்காய் வத்தல்
* மணத்தக்காளி வத்தல்

செய்முறை:

* முதலில் கொத்தவரங்காய் வத்தல் மற்றும் மாங்காய் வத்தலில் சுடுநீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் எலுமிச்சை அளவு புளியை எடுத்து 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், வடகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, ஊற வைத்த மாங்காய் வத்தல் மற்றும் கொத்தவரங்காய் வத்தலை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 2 1/4 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் புளி நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து, அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் நன்கு எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டக்காய் வத்தலை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் மணத்தக்காளி வத்தலை சேர்த்து வறுத்து இறக்கி, தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* குழம்பு நன்கு 10-12 நிமிடம் கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள சுண்டக்காய் வத்தலை சேர்த்து, பின் பாதி மணத்தக்காளி வத்தலை சேர்த்து, மீதமுள்ள மணத்தக்காளி வத்தலை கைகளால் நசுக்கி சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்து, 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், சுவையான வத்தக்குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, December 4, 2025, 15:03 [IST]
Desktop Bottom Promotion