புரட்டாசி மாசத்துல ஒருமுறை இந்த சைவ ஈரல் வறுவலை ட்ரை பண்ணி பாருங்க.. மட்டன் ஈரலே தோத்துடும்...

Posted By:

Saiva Eral Varuval Recipe In Tamil: புரட்டாசி மாதத்தில் உங்கள் வீட்டில் அசைவ உணவுகளை செய்யமாட்டீர்களா? ஒரு மாதம் உங்கள் வீட்டில் வெஜ் தானா? அப்படியானால் இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தோற்கடிக்கும் பல சைவ உணவுகளை செய்து சாப்பிட்டு, உங்கள் நாவில் உள்ள சுவை மொட்டுகளுக்கு விருந்தளியுங்கள்.

அப்படிப்பட்ட ஒரு சுவையான ஒரு சைவ வறுவல் தான் சைவ ஈரல் வறுவல். இந்த வறுவலானது கீரையைக் கொண்டு செய்யக்கூடியது. ஆனால் இதை சுவைத்தால் கீரையைக் கொண்டு தான் செய்தது என்று சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும்.

Saiva Eral Varuval How To Make a Veg Eral Varuval Recipe

உங்களுக்கு சைவ ஈரல் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ ஈரல் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கீரை - 1 கட்டு
* பச்சை மிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 சிட்டிகை
* கடலை மாவு - 1/4 கப்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை

வறுவலுக்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் 1 கீரை கட்டை எடுத்து, அதை சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் 3 பச்சை மிளகாயை எடுத்து, அத்துடன் அலசி வைத்துள்ள கீரையை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் அரைத்த கீரையை எடுத்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் கடலை மாவை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தட்டையான கிண்ணத்தை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் வேக வைத்து எடுத்து குளிர வைத்து, பின் கத்தியால் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்ககாளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகு தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை தெளித்து நன்கு கிளறி விட்டு, வேக வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு மசாலா ஒன்று சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுவையான சைவ ஈரல் வறுவல் தயார்.

Image Courtesy: kurinji. com

[ of 5 - Users]
Story first published: Sunday, September 29, 2024, 14:21 [IST]
Desktop Bottom Promotion