1/2 கப் ரவை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..

Posted By:

Rava Pongal Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான ஒரு காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு வழக்கமாக செய்யும் உப்புமா, கிச்சடி என்று செய்யாமல், பொங்கல் செய்து சாப்பிடுங்கள்.

இந்த ரவா பொங்கல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இது வேலைக்கு செல்பவர்கள் டக்கென்று காலை உணவை முடிக்கும் வகையில் சுலபமாக இருக்கும்.

Rava Pongal How To Make a Rava Pongal Recipe In 15 Minutes

உங்களுக்கு ரவா பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* ரவை - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடு தண்ணீர் - 3 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, குக்கரில் சேர்த்து, பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், முந்திரி, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் ரவையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள பருப்பை மசித்து சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 3 கப் சுடுநீரை ஊற்றி கிளறி மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான ரவா பொங்கல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 12, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion