தோசைக்கு இந்த சைடு டிஷ்ஷை ஒருமுறை ட்ரை பண்ணுங்க.. 2 தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடுவீங்க..

Posted By:

Andhra Style Mango Dal Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்யாமல், ஒருமுறை தால் செய்து சாப்பிடுங்கள். அதுவும் ஆந்திரா ஸ்டைல் மாங்காய் தால் செய்து சாப்பிடுங்கள் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

தற்போது மாங்காய் சீசன் என்பதால், நிச்சயம் அனைவரது வீட்டிலும் ஒரு மாங்காயாவது இருக்கும். உங்கள் வீட்டிலும் இருந்தால், அந்த மாங்காய் கொண்டு தால் செய்யுங்கள். இந்த மாங்காய் தால் தோசையுடன் மட்டுமின்றி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Mango Dal How To Make a Andhra Style Mango Dal Recipe

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் மாங்காய் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் மாங்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1/2 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய மாங்காய் - 1
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* வரமிளகாய் - 1
* பூண்டு - 5 பல் (தட்டிக் கொள்ளவும்)
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, நீரில் 2 முறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, துருவிய மாங்காய், மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு மற்றும் பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு லேசாக மசித்து விட வேண்டும்.
* பின் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில், ஒரு வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய், பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கலந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் மாங்காய் தால் தயார்.

Image Courtesy: Akshaya. com

[ of 5 - Users]
Story first published: Friday, May 24, 2024, 7:48 [IST]
Desktop Bottom Promotion