சத்தான.. கொள்ளு குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..

Posted By:

Kollu Kuzhambu Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரி சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் உடல் எடையைக் குறைக்க உதவும்படியான ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொள்ளு இருந்தால், அதைக் கொண்டு கொள்ளு குழம்பு செய்யுங்கள்.

இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி இந்த குழம்பை உங்கள் உணவில் செய்து சேர்த்துக் கொள்வீர்கள். அதுவும் இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

Kollu Kuzhambu How To Make a Kollu Kulambu Recipe

உங்களுக்கு கொள்ளு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* கொள்ளு - 1/2 கப்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு...

* நெய் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 10
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு பருப்பை போட்டு, அதில் நீரை ஊற்றி, குறைந்தது 7 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் ஊற வைத்த கொள்ளுப் பருப்பை கழுவி சேர்த்து, நீரை ஊற்றி, 2 தக்காளியை நறுக்கிப் போட்டு, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பருப்பையும், தக்காளியையும் நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, பெருங்காயத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேக வைத்து மசித்து வைத்துள்ள கொள்ளு பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து கிளறி, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொள்ளு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, January 29, 2026, 15:00 [IST]
Desktop Bottom Promotion