1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு சும்மா நச்சுன்னு இருக்கும்..

Posted By:

Karuvepilai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? வீட்டில் கறிவேப்பிலை அதிகமாக இருந்தால், எப்போதும் அதை தூக்கி எறிந்துவிடுவீர்களா? அப்படியானால் இனிமேல் அதை தூக்கி எறியாமல், அந்த கறிவேப்பிலையைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.

இந்த கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சற்று கெட்டியாக அரைத்தால், சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். இப்படி கறிவேப்பிலையை சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும் மற்றும் தலைமுடியும் நன்கு கருகருவென்று வளரும். முக்கியமாக இந்த ஸ்டைலில் கறிவேப்பிலை சட்னி செய்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Karuvepilai Chutney How To Make a Curry Leaves Chutney Recipe

உங்களுக்கு கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4- பல்
* சின்ன வெங்காயம் - 15
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* சின்ன மூடி தேங்காய் - 1 மூடி
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், புளி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் வறுத்த பொருட்களை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீதமுள்ள எண்ணெயில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, அத்துடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 1/2 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய 1 மூடி தேங்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் முதலில் வதக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 23, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion