பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..

Posted By:

Hyderabadi Style Paneer Kheema Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக பன்னீர் செய்வீர்களா? எப்போது பன்னீரை செய்தாலும் ஒரே மாதிரியான ஸ்டைலில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை பன்னீரை செய்வதாக இருந்தால், ஹைதராபாதி பன்னீர் கீமா மசாலாவை செய்யுங்கள்.

இந்த மசாலா சப்பாத்தி, பூரி, நாண் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடுமாறு ருசியாக இருக்கும். சொல்லப்போனால் இந்த சுவையில் பன்னீரை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பன்னீர் மசாலா ரொம்ப பிடிக்கும்.

Hyderabadi Paneer Kheema How To Make Paneer Kheema Masala

உங்களுக்கு ஹைதராபாதி பன்னீர் கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாதி பன்னீர் கீமா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடி செய்வதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* பாதாம் - 6
* முந்திரி - 10
* பட்டை - 1 சிறிய துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* கசகசா - 2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

ஊற வைப்பதற்கு...

* பன்னீர் - 400 கிராம் (துருவியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* கெட்டி தயிர் - 100 கிராம்

தாளிப்பதற்கு...

* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், பாதாம், முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீரை எடுத்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், பொடியாக நறுக்கிய புதினா மற்றும் 100 கிராம் கெட்டி தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள பன்னீரை சேர்த்து, பொடித்து வைத்துள்ள பொடி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஹைதராபாதி ஸ்டைல் பன்னீர் கீமா மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 17, 2026, 18:20 [IST]
Desktop Bottom Promotion