நாட்டுக்கோழி செட்டிநாடு மசாலா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சாதத்துல ஊத்தி சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!

Posted By:

Chettinad Nattukozhi Masala Recipe in Tamil: சண்டே வந்தாலே அசைவம்தான், அதிலும் சிக்கன் என்றால் அனைவருக்கும் ஒரு வயிறு கொஞ்சம் பெரிதாகி விடும். நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு பெரிய விவாதம் நாட்டுக்கோழி சிறந்ததா அல்லது பிராய்லர் கோழி சிறந்ததா என்பதுதான், இதற்கான பதில் மிகவும் எளிதானது, சுவையிலும் சரி, ஊட்டச்சத்திலும் சரி நாட்டுக்கோழியே சிறந்தது. ஆனால் அதன் அசாதாரண விலைதான் மக்களை நாட்டுக்கோழியிடம் இருந்து விலக்கியே வைத்துள்ளது.

பொதுவாக நாட்டுக்கோழி வாங்கினால் அதனை குழம்பு வைத்துதான் சாப்பிடுவார்கள், நாட்டுக்கோழி தண்ணிக் குழம்பு என்பது தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமானதும் கூட. ஆனால் ஒருமுறை நாட்டுக்கோழியை செட்டிநாடு ஸ்டைலில் இந்த பக்குவத்தில் சமைத்துப் பாருங்கள். இதன் சுவையே மிகவும் தனித்துவமானதாக இருக்கும். சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட இது மிகவும் அட்டகாசமாக இருக்கும். இந்த பதிவில் சுவையான நாட்டுக்கோழி செட்டிநாடு மசாலாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Chettinad Nattukozhi Masala Recipe How to Prepare Chettinad Nattukozhi Masala

தேவையானப் பொருட்கள்:

- நாட்டுக்கோழி - அரை கிலோ
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 2
- இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

- காய்ந்த மிளகாய் - 10
- வர மல்லி - 3 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்

தாளிக்க :

- பட்டை - 2
- கிராம்பு - 5
- பிரியாணி இலை - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

- தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக வறுத்து, ஆற வைத்து ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

- நாட்டுக்கோழியை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி விட்டு குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கி வைத்துக்கொள்ளவும்.

- சிறிதளவு சிறிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்த பின் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

- வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.

- பிறகு தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

- அடுத்து அதில் வறுத்து அரைத்த மசாலா, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி 2 நிமிடத்திற்கு பின் வேகவைத்த நாட்டுக்கோழியை சேர்த்து சில நிமிடங்கள் வதக்குங்கள்.

.- பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.

- மசாலா கெட்டியானவுடன் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் சூப்பரான செட்டிநாடு நாட்டுக்கோழி மசாலா ரெடி!

- இது சாதத்துடனும், இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, April 13, 2025, 12:10 [IST]
Desktop Bottom Promotion