கற்பழிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக சந்தோஷமாக வாழக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?

கற்பழிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக சந்தோஷமாக வாழக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?

Just Because She Is A Rape Victim, Does She Not Deserve A Happy Life?

இன்னும் நமது சமூகத்தில், நாம் நடந்துக் கொண்டிருக்கும் அதே சாலையில் பெண்களை வெறும் தசை பிண்டமாக மட்டுமே காணவோர் இருக்கிறார்கள் என்பதற்கான சாட்சி, நாம் தினமும் காணும், படிக்கும் கற்பழிப்பு செய்திகளே. சில சமயம் இந்த ஊடகங்களுக்கு வேறு வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும் கற்பழிப்பு செய்தியாவே போட்டுக்கிட்டு இருக்காங்களே என நொந்துக் கொள்வோம்.

ஊடகங்கள் ஒன்றும் சென்ற வருடமோ, சென்ற தசாப்தாமோ நடந்த கற்பழிப்பு வழக்கை செய்தியாக வெளியிடுவது இல்லையே. அனுதினமும் நமது தேசத்தில் எண்ணற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், தவறான தீண்டலுக்கும் பலியாகிக் கொண்டு தானே இருக்கிறார்கள். அதைத் தான் ஊடகங்கள் செய்தியாக வெளியிடுகின்றன.

மேலும், இந்த கற்பழிப்பு வழக்கில் சிக்கிய கைதி கூட ரோட்டில் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு நடைப்போடலாம். நாம் பெரிதாக எதுவும் கண்டுக் கொள்ள மாட்டோம். ஆனால், அதுவே, கற்பழிக்கப்பட்ட பெண் ஒருத்தி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள் என்றால். இவ எப்படி வெளிய வந்தா? ஒருவேளை இவதான் தப்புப் பண்ணிருப்பாளோ? என நாமாக கொளுத்திப் போக ஆரம்பித்துவிடுவோம். கொளுத்திப் போடா நமக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படிப்பட்டதாக இருக்கும்...

எப்படிப்பட்டதாக இருக்கும்...

நேற்றைய வீட்டுப் பாடம் முடிக்கவில்லை என்ற காரணத்திற்காக வாத்தியார் பிரம்பை எடுத்துக் கொண்டு அடிக்க வரும் போது, வெடுக்கு, வெடுக்கென்று கையை அடிப்படாமல் எடுத்துக் கொண்டே இருப்போமா...? அல்ல.., அடிப்பட்டு வலிக்கட்டும் என ஏதுவாக நீட்டிப் பிடித்துக் கொண்டிருப்போமா...?

கற்பழிக்கப் போகிறார்கள் என தெரிந்தவுடன்... அந்த பெண் கத்திக் கூச்சலிட்டு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள தான் முயற்சிப்பாள். ஆனால், ஒரு கட்டத்தில் இனி ஒன்றும் செய்ய முடியாது, உடல் முற்றிலும் வலுவிழந்து போய்விட்டது எனும் நிலையில் அவள் அசைவின்றி ஓய்ந்துப் போய்விடுவாள். இதை நான் கூறவில்லை, ஆய்வறிக்கைகள் கூறுகிறது.

கொச்சை!

கொச்சை!

ஆனால், கற்பழிக்கும் கொடூரர்கள்... நீதிமன்றங்களில்... அந்த பெண்ணை சுட்டிக் காட்டி... கற்பழிக்கும் போது அவர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என அப்பெண்ணை கொச்சைப் படுத்துவார்கள்.

கொலை செய்ய ஒருவன் விரட்டி வருகிறான்... உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஓடுகிறான் அப்பாவி. ஒருக்கட்டதில் உடலில் வலுவில்லை, கீழே விழுந்துவிடுகிறான். விரட்டியவன் குத்திக் கொன்று விடுகிறான். இதை நீதி மன்றத்தில்... நான் கொலை செய்ய முயற்சித்த போது அவன் தடுக்கவில்லை, கொலையை அனுபவித்தான் என ஒருவனாவது கூறுவானா?

கசக்கி எறிந்தப் பிறகு....

கசக்கி எறிந்தப் பிறகு....

கற்பழிக்கப்பட்டு அரை உயிரில் கசக்கி எறியப்பட்ட எந்த பெண்ணின் நிலை எவ்வாறாக இருக்கும்?

அந்த மிருகம் தன்னைவிட்டுவிட்டதா... அவன் என்னை வீட்டை அடைய விடுவானா? அல்லது கொலை செய்துவிடுவானா..? எப்படி வீட்டுக்கு செல்வது, தன்னை எப்படி தற்காத்துக் கொள்வது? என பல கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கும். அந்த மிருகம் சென்ற பிறகு... வீட்டுக்கு சென்றால் பாதுகாப்பை உணர முடியும் என்ற நிலையில் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அவள்... வீட்டை அடைய இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கிறது எனும் வேளையில் தான்... நான் கற்பழிக்கப்பட்டதை அறிந்தால்... வீட்டில் உள்ளவர்கள் தன்னை எப்படி பார்பார்கள்? அவமானத்தில் தற்கொலை செய்துக் கொள்வார்களா? இந்த சமூகம் தன்னையும், தனது குடும்பத்தையும் எப்படியும் தனிமைப் படுத்திவிடும். அதில் இருந்து எப்படி மீள்வது? என்ற பல கேள்விகள் எழும்.

என்ன செய்வது?

என்ன செய்வது?

வீட்டில் சொல்லலாமா? வேண்டாமா? என்பதே அவளுக்குள் பெரிய கேள்வியாக உருவெடுக்கும்.

வலியை வெளியே கூறிவிட்டால் பாதியாக குறைந்துவிடும் என்பார்கள். இது உண்மை! ஆனால், இந்த வலியை அவள் எப்படி வீட்டில் கூறுவாள். கூறினாலும், கூறாவிட்டாலும் இந்த வலி அவளுக்குள் எப்படியும் அதிகரிக்க தான் போகிறது. ஏனென்றால் அவள் கற்பழிக்கப்பட்டவள்.

பிரச்சனைகள்!

பிரச்சனைகள்!

இங்கே நமது சமூகத்தில் கற்பழிக்கப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என சிலவன இருக்கின்றன.

  • அவள் மீண்டும் வேலைக்கு செல்ல முடியாது.
  • அவள் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்ட கைதியாகவே வாழ வேண்டும்.
  • அவளுக்கு வரன் கிடைக்காது. திருமண வாழக்கை என்பது பகல் கனவாகிவிடும்.
  • கற்பழித்தவனை திருமணம் செய்துக் கொள்ள பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், கற்பழிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள தான் ஆண்கள் இல்லை.
  • பார்வை!

    பார்வை!

    அவள் பழையதை மறந்து புதிய வாழ்க்கை வாழலாம் என்றால், இந்த சமூகம் அவள் தெருவில் முதல் எடுத்து வைக்கும் போதே, ஒரு வினோதமான பார்வையை வீசும். அதில், அவளுக்குள் துளிர்விட்ட கொஞ்சநஞ்ச தைரியமும் வீழ்ந்துவிடும். இதை எல்லாம் தாண்டி அவள் மீண்டும் புது வாழ்க்கை துவங்குவது என்பது மிகப்பெரிய விஷயம்.

    ஆர்.டி.எஸ்!

    ஆர்.டி.எஸ்!

    ஆர்.டி.எஸ் (RTS) என்றால் Rape Trauma Syndrome. இது ஒரு வித மனநோய் என்று வைத்துக் கொள்ளுங்களேன். கற்பழிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணிடமும் இந்த மன நோய் காணப்படுகிறது. இவர்கள் உடலால், மனதால், உணர்ச்சியால் பல வகையில் பாதிக்கப்படுகிறார்கள். முக்கியமாக தங்கள் தனிப்பட்ட உள்மன ரீதியாக பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால், இவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை இயல்பாக வாழ இயலாது போகிறார்கள்.

    இதற்காக தான் கற்பழிக்கப்பட்ட சம்பவங்களில் சிக்கிய பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், அவர்கள் மனம் புண்படும் படி எதுவும் பேசக் கூடாது என கூறப்படுகிறது.

    செக்ஸ்!

    செக்ஸ்!

    கற்பழிப்பு சம்பவத்தில் சிக்கிய பெண்களுக்கு உடலுறவு / தாம்பத்திய வாழ்வில் பெரும் அச்சம் இருக்கும். செக்ஸ் என்ற காரணத்திற்காக தானே நான் பலியானேன் என்ற பயம் அவர்களை எப்போதும் சூழ்ந்திருக்கும். ஆகையால், அவர்கள் திருமண வாழ்வில் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள்.

    எனவே, முதலில் இவர்களுள் தைரியம் மற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்க சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். நிம்மதியான, அமைதியான சூழலில் இவர்கள் கொஞ்ச காலம் வாழ வேண்டும்.

    சுத்தமில்ல...

    சுத்தமில்ல...

    கற்பழிப்பு சம்பவங்களில் சிக்கிய சிலர் தங்களை தானே சுத்தம் இல்லாத நபராக காணும் வழக்கமும் காணப்படுகிறது. எத்தனை எடுத்துக் கூறினாலும், அவர்கள் இந்த மனநிலையில் இருந்து வெளிவர மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    மேலும், மிக நெருக்கமான உறவில் இருந்தவர்களுடன் பேசி பழகுவதற்கும் இவர்கள் சிரமப்படுகிறார்கள் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    கல்யாணம் பண்ணிப்பீங்களா?

    கல்யாணம் பண்ணிப்பீங்களா?

    இது சாதாரண கேள்வி அல்ல. நம்மில் யார் இதற்கு தயாராக இருப்போம். திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண் அதற்கு முன் வேறு ஒருவரை காதலித்துள்ளார் என்றாலே பலர் பின்வாங்கிவிடுவார்கள். இதில், கற்பழிக்கப்பட்டுள்ளார் என அறிந்தால் நிச்சயம் 99.9% பேர் பின்வாங்கிவிடுவார்கள்.

    ஒருவேளை இந்த கேள்விக்கு நல்ல விடைக் கிடைத்துவிட்டால் கூட, இவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும்.

    ஜிதேந்தர்!

    ஜிதேந்தர்!

    ஜிதேந்தர் ஹரியானாவில் வாழ்ந்து வரும் நபர். திடீரென இவரைப்பற்றி இங்கே ஏன் குறிப்பிட வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? இவர் தான் முந்தைய கேள்விக்கான பதில். இவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கரம் பிடித்தவர். சமூகத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு ஒரு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த புரட்சி திருமணத்தை செய்தார் ஜிதேந்தர்.

    இவர் வாழ்க்கை மட்டும் அளிக்கவில்லை. அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கல்வியும் அளித்தார். சட்டம் பயில வைத்தார். இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் பெண்களுக்காக போராட வேண்டும் என போராட்ட குணத்தையும் கற்பித்தார்.

    கற்பழிக்கப்படுவதை காட்டிலும், அதற்கு பிறகு அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விடாமல் தடுப்பது பெரிய குற்றமாகும்.

    போகட்டும் சார்....

    போகட்டும் சார்....

    "போகட்டும் சார், பொண்ணுங்க போகட்டும்... முன்னேறி போகட்டும். இன்னும் அவங்கள தடுக்காதீங்க..." என்பது போன்ற ஒரு வசனத்தை 'வேதாள'த்தில் அஜித் வசனமாக கூறியிருப்பார். அதேப் போல தான்... கற்பழிக்கப்பட்ட பெண்கள் ஏற்கனவே உடலளவிலும், மனதளவிலும் நிறையவே காயங்கள் கொண்டவர்கள். அவர்களை காற்றாட கொஞ்சம் நடைப்போடட்டும், சுதந்திரமாக வெளியே வரட்டும். மறக்க முடியாத நினைவுகளை மறந்து தொலைக்கட்டும். அவர்களை மீண்டும் காதுப்பட ஏதேனும் பேசி, ஏசி மீண்டும் வீட்டுக்குள் அடைத்துவிடாதீர்கள். காயங்களை நோண்டி பெரிதாக்கிவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion